நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

Monday 19 June 2017

வாழையில் எனது பயணம்..!



வாழை என்பது, கிராமபுற மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக செயல்படும் ஒரு அமைப்பு.  தற்போது விழுப்புரம் மற்றும் தருமபுரி மாவட்டங்களில் செயல்பட்டுகொண்டிருக்கிறது.  மேலும் தகவலுக்கு www.vazhai.org க்கு செல்லவும்.  இந்த பதிவில் வாழையில் எனது பயணத்தை நினைவுகூற உள்ளேன்.

எனது கல்லூரி படிப்பை முடித்து சென்னையில் பணியில் அமர்ந்த வருடம் 2010.  அலுவலகத்தில் சக பணியாளரிடம் இருந்து வாழை பற்றிய முதல் அறிமுகம் கிடைத்தது.  மிகவும் ஆர்வமாக இருந்தது காரணம் என் வீட்டில் நான் ஒரு முதல் பட்டதாரி.  ஆகையால் என் கல்வியில் ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு வழிகாட்டி இல்லாமல் பல சிரமங்களை அடைந்துள்ளேன்.  ஆகையால் நான் ஒரு வழிகாட்டியாக இருக்க பலமுறை எண்ணியதுண்டு.  மேலும் இயல்பிலே எனக்கு தெரிந்ததை மற்றவர்களுக்கு கற்பிப்பதில் பெரும் ஆர்வம் இருந்தது.  என் இத்தகைய எண்ணங்களுக்கு வாழை ஒரு சரியான தளமாக இருக்கும் என்று தோன்றியது.  ஆகையால் உடனே தொடர்புகொண்டு என்னை வாழை அமைப்போடு இணைத்து கொண்டேன்.
 
எனக்கு மிக நன்றாக நினைவில் உள்ளது என் முதல் வாழை பயிற்ச்சி பட்டறை பயணம்.  அன்று (ஜனவரி 2011) பட்டறைக்காக கிளம்பி கொண்டிருந்தேன். மனம் முழுக்க ஆவல், பயம், கேள்விகள், குதூகலம், குழப்பம், எதிர்பார்ப்பு, தயக்கம் இன்னும் பல உணர்வுகள் வியாபித்திருந்தன.  இதில் நான் சென்னைக்கு வந்தே சில மாதங்கள் தான் ஆகியிருந்தது.  மிகுந்த தயக்கத்திற்கு நடுவில் உள்ளுணர்வின் உந்துதலினால் வீட்டை விட்டு கிளம்பினேன்.  வெளியே சென்னை மஞ்சள் நிற ஒளி வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தது.  எனக்கு தாம்பரம் ரயில் நிலையத்தில் ஒரு ATM அருகே வந்து நிற்கும்படி தகவல் முன்னரே தரப்பட்டிருந்தது.  சரியாக இரவு 9:30 IST க்கு (பிற்பாடு VST பயன்படுத்த கற்றுகொண்டேன் :-) ) தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தேன்.  ATM அருகே ஒரு சிறிய மக்கள் கூட்டம் இருந்தது.  மிகுந்த தயக்கத்துடன் அருகில் சென்றேன்.

“என்ன வாழைஆ?” என்று ஒருவர் வினவினார்.  “ஆமாம் வாழை தான்” என்று பதிலளித்தேன்.  உடனே புன்னகையோடு கைகுலுக்கினார்.  சிறிது நேரத்திலேயே அனைவரும் அறிமுகம் ஆகிவிட்டார்கள்.  அப்போது தெரியாது அவர்களில் பலர் எனக்கு நெடும்கால நண்பர்களாக மாறப்போகிறார்கள் என்று.

சரியாக 9:30 VST க்கு :-) வாழையில் முன்பதிவு செய்திருந்த பேருந்து ஒன்று தாம்பரம் ரயில் நிலையத்திற்கு சற்று தள்ளி வந்தடைந்தது.  அனைவரும் பேருந்தில் சென்று ஏறினோம். பயணம் தொடங்கியது.  பல புதிய முகங்கள்.  பல அறிமுகங்கள்.  

“இங்க இட்லி இன்னும் வரல...  பரோட்டா எங்கப்பா…?”  

“இங்க கொஞ்சம் சாம்பார்..” , “தண்ணி கொஞ்சம் கொடுங்க ப்ளிஸ்”, “வாங்க ஜி வாங்க, எப்டி இருக்கீங்க”

என்று பல குரல்கள் ஒலித்தது.  சற்று நேரத்தில் என் கையிலும் ஒரு இட்லி பொட்டலம் இருந்தது.  சாப்பிட்டு முடித்தேன்.  மேலும் பல அறிமுகங்கள் நிகழ்ந்தன.  சிறிது நேரம் பட்டறை பயிற்சி குறித்து ஆங்காங்கே சிலர் பேசிகொண்டிருந்தார்கள்.  திடீரென்று ஒரு பெருங்குரல் அனைவரையும் ஒன்றினைத்தது.  என்னவென்று யோசிப்பதற்குள் ஆனைவரும் பாட ஆரம்பித்தார்கள். சற்று நேரத்தில் நானும் பாடிகொண்டிருந்தேன்.  மிக மகிழ்ச்சியாக பயணம் தொடர்ந்தது.  பல புதிய நண்பர்களை பெற்றேன்.  என் மனதில் இருந்த அனைத்து குழப்பங்களும் தீர்ந்தன.  ஒரு மணி நேரத்தில் அனைத்து புது முகங்களும் தெரிந்தவர்களாகி விட்டனர்.  தயக்கங்கள் காணமல் போயின.  இவ்வாறு எனது முதல் பயிற்சிப் பட்டறை சிறப்பாகத் தொடங்கியது.  


மறுநாள் காலை பலர் வெகு சீக்கிரமாக எழுந்து பட்டறைக்கு தேவையான பல ஏற்பாடுகளை செய்தார்கள்.  சுவற்றில் ஒரு கால அட்டவணை ஒன்று இருந்தது அதில் அந்த பயிற்சி பட்டறையில் நடைபெற உள்ள வகுப்புகளை பற்றிய குறிப்பு இருந்தது.  அதை பார்க்கும் போதே, அந்த பட்டறைக்காக அவர்களின் பல நாட்கள் உழைப்பு தெரிந்தது.  வகுப்புகளும் சிறப்பாக இருந்தது.  பட்டறையின் முடிவில் பல கேள்விகள்,  ஐயங்கள் என் மனதில் பிறந்திருந்தன.

அடுத்த பட்டறையை பற்றி யோசிக்கும் போது, நான் வாழையில் இணைந்த நோக்கத்தை நோக்கி பயணிக்க எனது முதல்  அடியை வைக்க விரும்பி  ஆங்கில குழுவில் இணைந்தேன் (இணைக்கப்பட்டேன் :-) ).   குழு நண்பர்களிடம், வகுப்பு குறித்து பல விவாதங்கள் நடைபெற்றன.  நானும் அவற்றில் கலந்துகொண்டேன். அதில் என் கேள்விகளையும் ஐயங்களையும் கேட்டு தெரிந்து கொண்டேன்.  எனக்கு தெரிந்தவற்றை எனது பாணியில் நானும் பட்டறையில் பயிற்சி அளித்தேன்.  இவ்வாறு சென்று கொண்டிருக்கும்போது கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து ஒரு குறிப்பிட தகுந்த ஒரு நிகழ்வு நடைபெற்றது.  அந்த நிகழ்வானது வாழையில் நான் மிகவும் ஆழமாக பயணிக்க வழிவகுத்தது.

வாழையில் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பது மட்டும் இல்லாமல், ஒவ்வொருவருக்கும் ஒரு வழிகாட்டியை அறிமுகபடுத்துவார்கள்.  அவ்வழிகாட்டியானவர் அந்த மாணவருடன் வாழையில் தொடர்ந்து பயணிப்பார்.   மேலும் வாழையில் இதற்காகவே சிறப்பு பயிற்சி வகுப்புகள் அவ்வபோது நடத்தப்படும்.  அதிலும் பங்கேற்று பயிற்சி பெற்றேன்.  இதுபோல கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து என்னை ஒரு வழிகாட்டியாக ஒரு வாழை தம்பிக்கு அறிமுகபடுத்தினார்கள்.  அன்று முதல் என் வாழை பயணம் முற்றிலுமாக மாறியது.  ஆங்கில வகுப்புகளுக்கு பாடங்களை தயார் செய்வதோடு மட்டும் இல்லாமல் என் தம்பியின் பலம் பலவீனத்திற்கு ஏற்றவாறும் பாடங்களை தயார் செய்ய ஆரம்பித்தேன்.  பட்டறையில் என் தம்பியோடு சேர்த்து மற்ற தம்பி தங்கைகளுடன் நிறைய நேரம் பகிர்ந்து கொண்டதில் ஒரு உண்மையை உணர்ந்தேன்.  நாம் அங்கு கற்பிப்பதைவிட அங்கு நாம் கற்பதுதான் அதிகம்…!

பெரும்பாலான வழிகாட்டிகளுக்கு ஏற்படும் ஆரம்பகால சிக்கல்கள் பலவும் எனக்கும் ஏற்பட்டது.  அதில் முக்கியமானது, எனக்கும் என் தம்பிக்கும் இடையிலான புரிந்துணர்வு மிகவும் மேலோட்டமாகவே இருந்து வந்தது.  எப்படியாவது என் தம்பியின் வட்டத்திற்குள் நான் செல்லவேண்டும் என்று எண்ணி அவருடைய ஆர்வங்களை எல்லாம் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன்.  அவர் மற்றவர்களுடன் பேசுவதில் பெரும்தயக்கம் காண்பிப்பவராக இருந்தார்.  அவருக்காக வாழை கலை நிகழ்ச்சி நேரத்தில் மொக்கையாக இருந்தாலும் ஒரு நாடகத்தை உருவாக்கி அவரை நடிக்கவைப்பேன்.  அவர் கைப்பந்து விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.  வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அவருடன் சேர்ந்து விளையாடுவது,  அவர் சுற்று சூழலை பற்றி தெரிந்துகொள்வது, அவரின் நண்பர்களை பற்றி கேட்பது போன்ற பல விவரங்களை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அவரிடம் கேட்டு அறிந்துகொண்டிருந்தேன்.  வாழையில் வருடத்திற்கு ஒரு முறை நாங்கள் எங்கள் தம்பி தங்கைகளின் வீட்டிற்கு சென்று வருவது வழக்கம்.  இதை ஒருபோதும் தவறவிட்டதில்லை, யாரும் தவறவிடக் கூடாத ஒரு அனுபவம். மேலும் வாழையில் நாங்கள் பெரும்பாலும் ஒன்றாகவே உறங்குவோம், ஒன்றாகவே உணவு உண்போம்.  ஒன்றாகவே அரட்டை அடிப்போம்.  இவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக அவரின் நட்பையும் நம்பிக்கையையும் பெற்றேன்.  எழுத்தில் சுருக்கமாக தெரிந்தாலும், இந்நிலையை அடைய கிட்டதட்ட மூன்று வருடங்கள் ஆனது.  இப்போது நாங்கள் எந்த விஷயத்தை பற்றியும் மிக சுலபமாக விவாதித்து கொள்வோம்.  கிட்டதட்ட ஐந்து வருடங்கள் அவருடன் பயணம் செய்தேன்.  இதில் நான் கற்றது மிக அதிகம்…!

என் தம்பி இப்போது 12ஆம் வகுப்பு முடித்து பொறியியல் கல்லூரியில் சேர விண்ணப்பித்து உள்ளார்.  அவருக்கு நான் வழிகாட்டியாக அறிமுகபடுத்தப்படும் போது அவர் 7ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார்.  இந்த பயணத்தில் ஐந்தாவது வருட இறுதியில் என் பணி நிமித்தம் காரணமாக வெளிநாடு செல்லவேண்டி இருந்தது.  இதனால் நேரில் சந்திக்கும் வாய்ப்பும், வாழை பயிற்சி வகுப்பிற்கு செல்லும் வாய்ப்பும் மிகவும் குறைந்துவிட்டது.  இருப்பினும் இப்போது நாங்கள் முன்னை விட அதிகம் தொலைபேசியில் பேசுகிறோம்.  இத்தகைய ஒரு அனுபவத்தை பெற காரணமாக இருந்த வாழை அமைப்பிற்கு நன்றிகள் பல..!  இம்மாதிரியான அனுபவங்களை ஆனைவரும் நிச்சயம் வாழ்வில் பெறவேண்டும்.


  • நன்றி :-)

Sunday 14 May 2017

நானும் அல்சரும்..! - முடிவு



சென்ற அத்தியாயத்தில் நெஞ்செரிச்சலினால் ஏற்படும் அறிகுறிகளை பற்றி பார்த்தோம். அந்த அத்தியாயத்தை படிக்காதவர்கள் இங்கே சென்று படித்துவிடுங்கள்.  ஏனெனில் இந்த கட்டுரை அதன் தொடர்ச்சி ஆகும்.


“எல்லாம் படிச்சாச்சி நி விசயத்துக்கு வா..”


இதோ வந்துட்டேன் :-).  போன அத்தியாத்தை நாம் ஒரு முக்கியமான தடயத்தோடு முடித்திருந்தோம்.  அந்த தடையம் வேறு ஒன்றும் இல்லை நாம் சாதரணமாக குடிக்கும் மோர்..!


“சரிப்பா அத வச்சி என்ன புரிஞ்சிக்கிட்ட..?”


சொல்கிறேன் அதற்க்கு முன்பு அய்யா நம்வாழ்வரின் ஒரு கருத்தை கூற விழைகிறேன்.  பயிர்களுக்கு தீமை செய்யும் பூச்சிகளை எதிர்க்க நன்மை செய்யும் பூச்சிகளும் நம் பயிர்களின் ஊடே எப்போதும் இருக்கிறது என்று கூறி உள்ளார்.  இத்தகைய சமநிலையானது இயற்கையில் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது.  


“அதுக்கும் மோர்க்கும் என்னயா சம்பந்தம்..?”


மேலே படியுங்கள்.  என் முதல் தடயத்தையும், அய்யாவின் அந்த கூற்றையும் பொருத்திப்பார்க்கும் போது என்னால் ஒரு விஷயத்தை உணரமுடிந்தது.  என் வயிற்றில் மோர் குடிக்கும்போது நெஞ்செரிச்சல் குறைகிறது எனில்.  மோரில் உள்ள எதோ ஒன்று என் வயிறை சமநிலைக்கு கொண்டுவருகிறது.  சரி மோரில் என்ன இருக்கிறது என்று யோசித்தால், அதில் இருப்பது உடலுக்கு நன்மை செய்யும் நுண்யுரிகள்.  சரி,  மோர் குடித்தாலும் சில மணிநேரங்கள் கழித்து மீண்டும் நெஞ்செரிச்சல் வர காரணம் என்ன….?????


நன்மை செய்யும் நுண்ணுயிர்களால் எனக்கு சற்று நிவாரணம் கிடைக்கிறது எனில், என் வயிற்றில் தீமை செய்யும் நுண்யிர்களால் மீண்டும் எனக்கு நெஞ்செரிச்சல் உருவாகிறது என்று தோன்றியது..!  இதோ இந்த எண்ணம்தான் என் முழு தீர்விற்கு ஆதாரமானது.


“பில்ட்டப் போதும்,  மேல சொல்லு…”


ரைட்டு ஓகே :-) மேற்கொண்டு போவதற்கு முன்பு,  நான் நெஞ்ஜெரிச்சளுக்காக ஒருமுறை அலோபதி மருத்துவமனைக்கு சென்றிருந்தேன் அங்கு அவர்கள் என்னை கேட்ட கேள்விகள்.  


கேள்வி: உங்களுக்கு stress அதிகமா இருக்க?
பதில்: அப்படினா என்ன?
கேள்வி: நீங்க junk food சாப்பிடுவிங்கள?
பதில்: அப்படினா என்ன?
கேள்வி: நீங்க காரமா சாபிடுவிங்களா?
பதில்: இல்லை


இம்மாதிரி கேள்விகள் சென்றது. உண்மையில் மன அழுத்தம், மசாலா உணவுகள் நமக்கு நெஞ்ஜெரிச்ச்சலை தருவதில்லை.  நமக்கு நெஞ்செரிச்சல் வர காரணம் நம் வயிற்றில் போதுமான ஜீரண அமிலம் இல்லை….!  


“அது எப்படி வயித்துல ஆசிட் கம்மி ஆச்சி…?”


மிகச்சரியான கேள்வி…!  பதில்…. Helicobacter Pylori…


“அப்படினா..?”


Helicobacter Pylori என்பது ஒருவகை பாக்டிரியா.  இந்த நுண்ணுயிரி தான் எனது அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் காரணம்.  இந்த பாக்டிரியாவானது நம் வயிற்றின் கோழை படலத்தின் உள்ளே சென்று அங்கிருந்து கொண்டு கொஞ்சம் கொஞ்சம்மாக நம் வயிற்றின் அமிலத்தன்மையை குறைக்கும்.  இதற்க்கு காரணம் இதனால் நம் வயிற்றின் அமிலதன்மையில் வாழ முடியாது.  தான் வாழ்வதற்கு ஏற்றவாறு அமோனியா என்ற காரத்தன்மையை நம் வயிற்றில் உற்பத்தி செய்து கலக்கிறது.  இதனால் நம் வயிற்றின் அமிலத்தன்மை குறைந்து காரத்தன்மை அதிகரிக்கிறது.  இந்த காரதன்மையில்தான் மற்ற நுண்ணுயிரிகள் செழித்து வளரும்.  ஆகையால் ஒரு பெரும் நுண்ணுயிரிகளின் கூட்டமே நம் வயிற்றில் தொற்றுகிறது.  இந்த நிலையில் நாம் என்ன சாப்பிட்டாலும் அது அந்த நுண்ணுயிரிகளால் நொதித்து அதன் மூலம் காற்று அழுத்தம் ஏற்பட்டு நாம் உண்ட உணவு நம் வாய்க்கு திரும்ப மேலெழும்புகிறது…!!!  இது கிட்டத்தட்ட நம் தோசை மாவை புளிக்க செய்வதற்கு இணையானது.


இந்த நிலையில் நாம் எவ்வளவுதான் ஆரோக்கியமான உணவை உண்டாலும் அது ஒழுங்காக செரிக்காது இதன் விளைவு நம் உடலில் மிகபெரிய அளவில் உட்டசத்து குறைபாடு ஏற்படுகிறது.  மிக குறிப்பாக வைட்டமின் பி குறைபாடு ஏற்படுகிறது.  இது மிக பெரிய பிரச்சனை காரணம் நம் உடலால் வைட்டமின் பிஐ மற்ற வைட்டமின்களை போன்று கல்லீரலில் சேமிக்க முடியாது.  ஏனெனில் இது நீரில் கரயகூடிய வைட்டமின்.  நம் உடலில் உண்ட உணவு செரிப்பதர்க்கும் அது சிறு சிறு அமினோ அசிட்களாக மாறுவதற்கும் வைட்டமின் பி தான் அடிப்படை.  உடலின் சக்தி பெருக்கத்திற்கும் இதுவே அடிப்படை.  இப்போது நம் முதல் அத்தியாயத்தில் படித்த அறிகுறிகளை நினைத்து பாருங்கள் அனைத்தும் ஒத்துபோகும்..!


“இவ்ளோ விசயம் இருக்கா இதுல..  சரி அப்புறம் என்ன பன்ன..?”


இந்த விசயங்களை எல்லாம் நான் அறிய எனக்கு மிக முக்கியமான அடுத்த தடயமாக அமைந்தது எழுமிச்சை பழம்..?  நான் சிறுவயதில் இருந்தே நிறைய எலுமிச்சை ரசம் குடிப்பேன்.  என் வயிறு பிரச்னைக்கு பிறகு நான் எலுமிச்சை ரசம் குடித்தால் அடுத்த அரை மணி நேரத்தில் எனக்கு அடுக்கு தும்மல் வந்துவிடும்.  இந்த தடயத்தை வைத்து ஆராயும்போது தான் இது வைட்டமின் பி குறைபாடால் வருவது என்று அறிந்தேன்.  அந்த விவரத்தை இங்கே (http://www.chiark.greenend.org.uk/~vclarke/citric.html) அறியலாம்.  இவ்வாறு இதையும் H. Pylori ஐயும் சம்பந்தபடுத்த முடிந்தது.  


எனக்கு நன்றாக நினைவில் உள்ளது.  அப்போது நான் வாழை பயிற்சி பட்டறையில் உறங்கிகொண்டிருந்தேன் நேரம் அதிகாலை 2 மணி.  மூக்கில் இருந்தது ஒரே சளி தும்மல். வேறொன்றும் இல்லை காரணம், முந்தைய நாள் காலை வகுப்பில் lemon juice :-) ஒரு குவளை அருந்தி இருந்தேன்.  வெறுத்துபோய் எழுந்து இணையத்தில் தேடும்போதுதான் மேலே குறிப்பிட்ட அந்த இணைப்பு கிடைத்தது.  அதற்க்கு முன்பு பலமுறை தேடியும் கிடைக்காத பதில் அன்று இரவு கிடைத்தது.  ஏனோ அன்று முதல் மனித பிறப்பின் நோக்கமே தன்னை அறிதல் என்று தோன்ற ஆரம்பித்தது.


“மொக்க போடாத.. விசயத்துக்கு வா…”


ஓகே... ஓகே… உடனே மறுநாள் காலை எழுந்து B complex மருந்து வாங்கி சாப்பிட்டேன். விலை 1 ரூபாய்.  அதிசயம் அடுத்த 1 மணி நேரத்தில் தும்மல் காணமல் போனது. உடலில் சக்தி கூடுவதை உணர்தேன்.  மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.  சரி உடனடி தீர்வை கண்டாயிற்று ஆனால் அடிப்படை பிரச்சனை இன்னும் அப்படியே இருக்கிறதே, அதாங்க நம்ம H. pylori.


வாசகர்களை கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்ட அய்யா நம்வாழ்வாரின்
கூற்றை நினைவுபடுத்தி கொள்ளுமாறு கேட்டுகொள்கிறேன்.  இந்த H. Pylori ஐ antibiotics மருந்துகள் மூலமும் அழிக்க முடியாது.  நானே அதற்க்கு உதாரணம்.  நான் amoxi, PPI போன்ற மருந்துகளை சோதனை அடிப்படையில் மிக மிக குறைந்த நாட்களே சாப்பிட்டு இருக்கிறேன்.  அனால் நிவாரணம் இல்லை.  அப்போதுதான் மோர் பற்றிய நியாபகம் வந்தது.   ஆக இந்த கிருமியை ஒழிக்க வேண்டுமானால் நாம் மாற்று கிருமியின் மூலமே அதை சாதிக்க முடியும் என்று தோன்றியது.  இந்த பார்வையில் தேடும்போதுதான் எனக்காகவே தயாரித்தது போன்ற ஒரு மருந்து கிடைத்தது அதற்க்கு பெயர் pylopass (probiotic).  இந்த மருந்தானது Lactobacillus reuteri என்ற உடலுக்கு நன்மை புரியும் நுண்ணுயிரியை மிக அதிக அளவில் கொண்டுள்ளது.  இதை இணையத்தில் இருந்து வங்கினேன்.  மறுபடியும் அதிசயம் என் நெஞ்செரிச்சல் மூன்றே நாட்களில் மிக பெரிய அளவில் குறைந்தது.  தொடர்ந்து 30 நாட்கள் அந்த மருந்தை எடுத்தேன் முழு நிவாரணம் கிடைத்தது.  அந்த மருந்தை நிறுத்தி கிட்டதட்ட 30 நாட்களுக்கு மேல் ஆகிறது.  இதுவரை நெஞ்செரிச்சல் வரவில்லை.  அனைத்து உணவுகளையும் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக்கொண்டு வருகிறேன்.


என்னதான் கிருமியை ஒழுத்துவிட்டலும், என் வயிறானது தனது ஒட்டுமொத்த சக்தியை இழந்து இருந்தது.  அனால் இந்த நேரத்தில் வயிற்றை பலபடுத்தும் உணவுகளான பாகற்காய், முருங்கை, திரிபாலா சூரணம் முதலியவற்றை எடுக்க ஆரம்பித்தேன்.  அதிசயம் அனைத்தும் இப்போது ஒழுங்காக செரித்து மிக நல்ல பலன்களை தந்தன.  தற்போது என் வயிறு என்ன சொல்கிறதோ அதுவே எனக்கு வேத வாக்கு.  அது பசி என்றால் மட்டுமே உண்கிறேன்.  அதுவும் போட்டிபோட்டு கொண்டு உணவுகளை அரைத்துதள்கிறது.  என் சிறுவயதில் நான் இருந்த சக்தி நிலைக்கு மிக வேகமாக முன்னேறி கொண்டிருக்கிறேன்..!


  • ஆய்வு சிறப்பாக முடிந்தது நன்றி…!

Saturday 13 May 2017

நானும் அல்சரும்..! - தொடக்கம்




"என்னடா இது தலைப்பு நானும் அல்சரும்..?"
என்று யோசிக்கிறீர்களா?  ஆம் இந்த கட்டுரையில் வயிற்று புண் பற்றி தான் பேசப்போகிறேன்.   எனக்கு நன்றாக நினைவில் உள்ளது எனது முதல் வயிற்று புண் எரிச்சல்.  ஒருநாள் என் தம்பியோடு சேர்ந்து கிணற்றில் குளித்து கொண்டிருக்கும்போது திடீரென்று நெஞ்செரிச்சல் வந்தது.  ஏன் என்று தெரியவில்லை அந்த எரிச்சலை பொருட்படுத்தவும் இல்லை.  நான் அப்பொழுது கிட்டத்தட்ட பதினொன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன் வயது 17.  அன்றிலிருந்து கிட்டத்தட்ட எனது 28 ஆம் வயதில்தான் அதற்க்கான உண்மையான காரணத்தை கண்டுபிடித்து சரிசெய்தேன்.  இந்த கட்டுரையில் என் வயிற்று புண்ணை சரி செய்வதற்காக நான் மேற்கொண்ட பல விசயங்களையும் கடந்து வந்த பாதையையும் விவரிக்க இருக்கிறேன்.  இப்போது அல்சர் உள்ளவர்கள் இந்த கட்டுரையை நிச்சயம் படியுங்கள் இது உங்களுக்கான ஒரு தீர்வாக இருக்கும்.

அல்சரின் ஆரம்ப காலத்தில் நான் அதை பெரிதாக பொருட்படுத்தவில்லை.  அதன் விளைவாக பிரச்சனையின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே சென்றது.  ஒரு கட்டத்தில் நான் என்ன சாப்பிட்டாலும் அடுத்த ஒரு மணிநேரத்தில் எனக்கு நெஞ்செரிச்சல் வந்துவிடும் என்ற நிலைமை உருவாகிவிட்டது.  மிகவும் வருத்தமாக இருந்தது.  நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதில் தீவிர நம்பிக்கை கொண்டவன் நான்.  ஆகையால் இந்த நெஞ்செரிச்சல் ஒரு பெரும் வருத்தத்தை எனக்கு உருவாக்கிவிட்டது.  சரி, இதை எப்படியாவது சரி செய்ய வேண்டும் என்கிற அளவுக்கு நிலைமை மோசமானது எனது 25 வது வயதில்தான்.  மிக தீவிரமாக ஆராய ஆரம்பித்தேன்.  நெஞ்சு எரிச்சலை சரி செய்ய எந்த அளவுக்கும் செல்ல தயாராய் இருந்தேன் அனால் அலோபதி மருத்துவம் மட்டும் வேண்டாம் என்ற முடிவை எடுத்திருந்தேன்.  இந்த முடிவு எவ்வளவு முக்கியாமான முடிவு என்பதை என் பிரச்சனை சரி ஆனா பிறகு உணர்ந்தேன்.  சரி விசயத்திற்கு வருவோம்.  எனக்கு வந்த பிரச்சனையை சரியாக சொல்ல வேண்டுமெனில், ஆங்கிலத்தில் GERD (Gastroesophageal reflux disease) என்பார்கள்.

“என்னப்பா இது GERD? ஒன்னும் புரியலையே..”

GERD என்பது, நாம் உண்ணும் உணவு சாப்பிட்ட சில மணி நேரத்திற்கு பிறகு சிறிது நேரத்தில் நமது வாயிற்கு திரும்ப வருவது.  அவ்வாறு வரும்போது மிகவும் புளிப்பு சுவையாக இருக்கும்.  அது வேறொன்றும் இல்லை நமது வயிற்றின் ஜீரண அமிலம்.  உணவு மண்டலத்தை பற்றி பேசும்போது நாம் இவ்வாறு ஒரு வாக்கியத்தை கேட்டிருப்போம் “தலை கீழா நின்னு தண்ணி குடிச்சாலும் தண்ணி திரும்ப வாய்க்கு வராது”  இதற்க்கு காரணம் நம் வயிறும் உணவு குழலும் இணையும் இடத்தில் ஒரு சவ்வு உள்ளது.  அந்த சவ்வானது ஒரு பக்கம் மட்டுமே திறக்கும் சவ்வாகும் அதற்கு ஆங்கிலத்தில் LES (lower esophageal sphincter) என்று அழைப்பார்கள்.  இந்த சவ்வானது உணவு பொருள்களை உணவு குழாயில் இருந்து வயிற்றிற்கு அனுப்புமே தவிர வயிற்றில் இருந்து உணவானது திரும்ப உணவு குழாயிக்கு வர அனுமதிக்காது.  அனால் நெஞ்செரிச்சல் உள்ளவர்களுக்கு உணவாது வயிற்றில் இருந்து திரும்ப மேலெழும்பி வரும்.  நம் வயிரானது மிக வீரியம் உள்ள அமிலத்தை தாங்குவதற்கு இயற்க்கையாகவே ஒரு கோழை படலம் வயிற்றின் உட்புறத்தை பாதுகாக்கிறது.  ஆனால் அத்தகைய படலமானது நமது உணவுகுழலுக்கு கிடையாது.  ஆகையால் நாம் உண்ட உணவானது வயிற்றில் இருந்து மேல் நோக்கி வரும்போது மிக அதிக அமில தன்மையில் இருப்பதால் மிக அதிக எரிச்சலை உணவு குழாயில் உண்டாக்கும்.  இதையே நாம் நெஞ்செரிச்சல் என்கிறோம்.  இதை கவனிக்காமல் விட்டால் மிக தீவிரமான விளைவுகளை உண்டாக்கும்.  

“அது எப்படி ஒரு சாதாரண நெஞ்சிரிச்சல் தீவிர பிரச்னையை உண்டாகும்..?”

நெஞ்சிரிச்சல்  என்றால் என்னவென்று பார்த்தோம் அனால் அது ஏன் வந்தது? எப்படி வந்தது?  போன்ற கேள்விக்கு பதில் கண்டறிந்தோம் எனில் மேலே கேட்டகப்பட்ட கேள்விக்கு சுலபமாக பதில் அறியலாம்.  

எனக்கு நெஞ்சிரிச்சல் வந்தபோது நான் பல உணவுகளை சோதித்து பார்த்திருக்கிறேன்.  உதாரணத்திற்கு, மிளகு ரசம், ஆப்பிள், வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு, பிரியாணி, வாழை பழம், கருப்பு உப்பு, வாழை தண்டு, வெறும் பழங்கள், மணத்தக்காளி, மோர், வினிகர், முட்டைகோஸ் ஜூஸ் இன்னும் பல.  என் நண்பர்களிடம் வாரத்திற்கு ஒரு முறை ஏதாவது ஒரு உணவை குறிப்பட்டு அது நெஞ்ஜெரிச்சலுக்கு நன்றாக வேலை செய்கிறது என்று சொல்லி பெரும் தலை வேதனையை அவர்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறேன் :-) .  

“முயற்சி செய்த எந்த உணவுமே பிரச்சனையை சரி செய்யவில்லையா?”

ஒவ்வொரு உணவும் ஒரு சில நாட்கள் நிவாரணம் அளித்தது.  குறிப்பாக மோர் பல மாதங்களுக்கு நிவாரணம் அளித்தது.  தினமும் மோர் குடிக்க ஆரம்பித்தேன்.  அனால் ஒரு கட்டத்தில் மோர் குடித்தாலும் நெஞ்செரிச்சல் தொடங்கிவிடும் ஆகையால் அதையும் கைவிட்டேன்.  குறிப்பிட்டு சொல்லகூடிய இன்னொரு உணவு ஆப்பிள்.  எனக்கு நெஞ்செரிச்சல் வரும்போதெல்லாம் ஆப்பிள் சாப்பிட்டால் உடனே கட்டுப்படும் அனால் பிரச்னை தீராது.

இவ்வாறு பல சோதனைகளை என் உடம்பில் செய்து பார்த்தேன் ஆனால் எதுவும் சரியாகவில்லை.  சித்த மருத்துவமனைக்கும் சென்று பார்த்தேன் அதுவும் சரியாகவில்லை.  ஒரு கட்டத்தில் வெறுத்துபோனேன்.  அறிவியல் தொழில் நுட்பம் இவ்வளவு வளர்த்திருக்கும் இக்காலத்தில் ஒரு வயிறு பிரச்சனையை சரி செய்ய முடியாத? போன்ற பல கேள்விகள் மனதிற்கு வந்தது.  

“அப்பறம் எப்படிப்பா சரி ஆச்சி..?”

ஒரு கட்டத்தில் இதெல்லாம் வேலைக்கு ஆகாது என்று உணர்ந்து என் உடலில் தோன்றும் அறிகுறிகளை மிக கவனமாக ஆராய ஆரம்பித்தேன்.  இந்த நிலையில் தான் என் உடலின் மொழியை நான் புரிந்து கொள்ள ஆரம்பித்தேன். மிக உனனதமான நண்பன் நம் உடல்.  தினமும் நம்மிடையே பேசிக்கொண்டிருக்கிறது நாம்தாம் கவனிப்பதில்லை.  

“சரி என்ன அறிகுறிலாம் தெரிஞ்சது..?”

பல அறிகுறிகளை கண்டறிந்தேன்.

1. உணவு சாப்பிட்ட உடன் சோம்பல்.
2. தினமும் காலையில் தும்மல்.
3. மாலை நேரத்தில் கண்கள் சிவத்தல்.
4. தீவிர நெஞ்செரிச்சல்.
5. எப்போதும் சோர்வு.
6. மலம் மோசமாக வெளியேறியது.  சரியாக செரிக்கவில்லை என்றால் எப்படி கூழ் மாதிரி போகுமோ அப்படி.

இன்னும் பல அறிகுறிகள்.  எனது நண்பர்கள் கணேஷ் மற்றும் மைதிலி அவர்களிடமும் என் மனைவி கௌரி இடமும் அனைத்து அறிகுறிகளையும் சொல்லி அவர்களை அரை வைதியர்காளாக்கிவிட்டேன் :-)

“சீரியஸ்சா போய்கிட்டு இருக்கும் போது காமடி பண்ணாத, அப்புறம் என்ன ஆச்சி..?”

எனக்கு நன்றாக நினைவில் உள்ளது, மோர் புளித்து இருப்பதால் அதை குடித்தால் நெஞ்செரிச்சல் அதிகம் ஆகும் என்று நினைத்து பல நாட்கள் அதை குடிக்காமல் இருந்தேன்.  வாழை (An NGO for education) பயிற்சி பட்டறை செல்லும் போது அங்கு தவறாமல் மோர் குடிப்பேன் காரணம் சுவையாக இருக்கும் :-) (ஒரு கூட்டமே அந்த மோருக்கு அடிமை).  இந்த சம்பவம்தான் என் தீர்விற்கு முதல் படி.  இந்த தடயம் தான் என் யோசனையை வேறு தளத்திற்கு கொண்டுசென்றது.  அதன்மூலம் தீர்வையும் அடைந்தேன்.  அடுத்த இறுதி அத்தியாயத்தில் பிரச்சனையின் மூலத்தையும் அதன் தீர்வையும் விரிவாக பார்ப்போம்.
  • ஆய்வு தொடரும்

Friday 10 March 2017

தற்சார்பு மருத்துவம் - அத்தியாயம் 2 - தற்காப்பு



    சென்ற அத்தியாயத்தில் அமில கார சமநிலையை பற்றி விரிவாக பார்த்தோம்.  இந்த அத்தியாயத்தில் அவை நம் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுத்துகின்றன என்பதை பார்க்கலாம்.

    அமில கார சமநிலை எவ்வளவு முக்கியம் என்றும், அதை உடல் சமநிலையில் வைக்க அதி தீவிர  ஏற்பாடுகளை மேற்கொள்ளும் என்றும் போன அத்தியாயத்தில் பார்த்தோம்.  அனால், உடலானது இந்த சமநிலையை ஏன் இவ்வளவு தீவிரமாக பேணிகாக்க வேண்டும்..?  காரணம் உள்ளது.  


    நம் உடலானது பல கோடி செல்களை கொண்டு உருவாகி உள்ளது.  ஒவ்வொரு செல்லும் உயிர்ப்புடன் இருந்தால்தான் நாம் உயிர்ப்போடு இருக்க முடியும்.  இதில் செல்களை உயிர்ப்புடன் பார்த்துக்கொள்வதில் ரத்தம் மிகப்பெரும் பங்கை வகிக்கிறது.  முன்னரே நாம் பார்த்திருக்கிறோம் ரத்தமானது சற்று கார தன்மை கொண்டது (pH).  எப்போது ரத்தமானது காரதன்மையில் இருந்து சற்று அமில தன்மையை அடைகிறதோ அப்போதுதான் உடலின் சமநிலை பாதிக்க ஆரம்பிக்கிறது. உடலானது இந்த அமில நிலையை மீண்டும் கார நிலைக்கு கொண்டுவர தனது அனைத்து முன்னேற்பாடுகளையும் முடுக்கி விடுகிறது.  ஆரம்பத்தில் நமக்கு இதைபற்றி ஒன்றும் தெரிவதில்லை.  ஒரு கட்டத்தில் உடலானது வெளிப்படையான சில அறிகுறிகளை வெளியிட ஆரம்பிக்கிறது.  தலைவலி, தோல் பிரச்சனைகள், அலர்ஜி, ஜலதோஷம், ஜுரம் போன்றவை ஆரம்ப அறிகுறிகள்.  நாமோ இதை வியாதி என்று நினைத்து மருந்து சாப்பிட்டு அந்த அறிகுறிகளை நிறுத்திவிடுகிறோம்.  உண்மையில் நாம் நம் உடலை அதன் வேலையை செய்ய விடாமல் தடுத்திருக்கிறோம்.


    ஒரு கட்டத்தில் இந்த அமில நிலை இன்னும் மோசமாக போகும்போது மிக மோசமான நிலைமை உருவாகிறது.  தைராய்டு, அட்ரினல், கல்லீரல் மேலும் பல உள்ளுறுப்புகள் தனது உச்சகட்ட திறனை விட மிக மிக குறைவாக செயல் பட ஆரம்பிக்கிறது.   அமில நிலை இன்னும் மோசமாக போனால், உடலின் பிராணவாயுவின் அளவு குறைய தொடங்கும்.  வளர்சிதை மாற்றம் தடைபடும், செல்கள் இறக்க தொடங்கும்.  உடல் மரணத்தை நோக்கி வேகமாக நகரும்.


“அதான் உடம்பு இதெல்லாம் தானா பாதுக்குமே அப்பறம் என் இந்த பிரச்சன வருது..?”


    ஆம், உடல் சமநிலைக்கான முன்னேற்பாடுகளை சிறப்பாக மேற்கொள்கிறது.  அமில நிலையை சமன் செய்ய, உடல் தன்னுள் சேமித்து வைத்திருக்கும் கார கனிமங்களான சோடியம், பொட்டாசியம், கால்சியம், மக்னிசியம் போன்றவற்றை எடுத்து அமில நிலையை சமன் செய்ய முயற்சிக்கிறது.  ஒரு கட்டத்தில், இந்த கனிமங்கள் தீர்ந்தவுடன் உடலின் எலும்புகள், தசைகளில் இருந்து இவற்றை எடுத்து பிரச்சனையை சரி செய்கிறது.  இந்த நிலையில்தான் நமக்கு உடலில் வைட்டமின்கள், கனிமங்கள் குறைபாடு ஏற்படுகிறது.  மேலும் தொடக்க அறிகுறிகள் தோன்றுகின்றன.


    இவை அனைத்தும் பிரச்சனையின் தொடக்கம் தான்.  ஒரு கட்டத்தில் கார கனிமங்கள் உடலில் தீர்ந்தவுடன், உடலானது அமில கழிவை வேறு வழி இல்லாமல் திசுக்களில் சேமிக்க தொடங்குகிறது.  இந்நிலையில் நமது சிறுநீரகமும், கல்லீரலும் இதை சரி செய்ய அதிகப்படியான வேலைப்பளுவை சுமக்கிறது.  இப்போது இந்த நிலைய சரிசெய்ய நம் வெள்ளை அணுக்கள் களத்தில் குதிக்கின்றன, இந்நிலையில் உடலில் (inflamatoin) வீக்கம், அழற்சி, தடிப்பு ஆகியவை உருவாகிறது.


    மேலும் அமில நிலை அதிகரிக்கும் போது உடல் வேறு வழி இல்லாமல் அவற்றை உடலின் உள்ள இதயம், கணையம், கல்லீரல், நுரையீரல், மார்பு பகுதி, வயிற்றில், தொடையில், இடுப்பில்,  மூளையில் கொண்டு சேர்க்கிறது. இதற்க்கு பெயர்தான் முதுமையடைதல்…!


    இந்த அமில பெருக்கம் நமக்குத்தான் பிரச்சனையே தவிர வேறு ஒருத்தருக்கு மிகவும் குதூகலமான விசயம்.  யார் என்று யோசிக்கிறீர்களா…?  அவர் வேறு யாரும் இல்லை, நுண்ணுயிர்கள்தான்…!  அதைப்பற்றி அடுத்த அத்தியாயத்தில் விரிவாக பார்ப்போம்.
- மருத்துவம் தொடரும்


Tuesday 7 March 2017

தற்சார்பு மருத்துவம் - அத்தியாயம் 1 - சமநிலை


ஆரோக்கியம் என்பது உடலின் சமநிலையை பொருத்தது.  பரந்து விரிந்த இந்த பிரபஞ்சமே சமநிலையில் இருப்பதால்தான் தன்னை நிலை நிறுத்திக்கொள்கிறது.  அதேபோன்று நம் உடலிலும் ஒரு மாபெரும் பிரபஞ்சம் உயிர்ப்போடு இயங்கி கொண்டிருக்கிறது.  உடலின் சமநிலை பாதிக்கும் போது நம் உடலில் உள்ள பிரபஞ்சமும் தன் சமநிலையை இழக்கிறது, விளைவு, நோய் தொற்று, சோர்வு, சிந்தனை தேக்கம், உடல் எடை அதிகரிப்பு, உடல் வலி, செரிமான கோளாறு போன்ற மேலும் பல பிரச்சனைகள் உருவாகின்றன.


நவீன வாழ்கை முறை மற்றும் உணவு பழக்கங்கள் நமது உடல் சமநிலையை பெரிய அளவில் பாதிக்கின்றன.  இதன் விளைவாக நீரிழிவு, புற்று நோய் மற்றும் இருதய கோளாறு போன்றவை நமக்கு பாரிசாக கிடக்கிறது.  தமிழ் நாட்டில் இந்த மூன்று நோயிகளும் மிக பிரபலம்.  இதற்க்கு உணவை மட்டும் குறை சொல்வது சரியாகாது அதற்க்கு பின் உள்ள உணவு அரசியலையும் நாம் கவனிக்க வேண்டும்.  


நாம் அனைவரும் ஒரு நாள் இறக்கத்தான் போகிறோம்.  அனால் நாம் இறக்கும் வரை ஆரோக்கியத்துடன் உயிர்ப்போடு வாழ நம் அனைவருக்கும் உரிமை உள்ளது.  சரி விசயத்திற்கு வருவோம்.  நீங்கள் எத்தகைய ஆரோக்கிய சீர்கேட்டில் இருந்தாலும் சரி.  உங்களுக்கு எத்தகைய வியாதிகள் இருந்தாலும் சரி.  உங்கள் கொலஸ்ட்ரால் அளவு, சர்க்கரையின் அளவு, ஹோர்மோன் பிரச்சனை மேலும் வேறு எந்த பிரச்சனை இருந்தாலும் அனைத்தையும் மறந்துவிடுங்கள்.  ஆம்..! உடனே மறந்து விடுங்கள்.  நீங்கள் கவனிக்க வேண்டிய ஒரே ஒரு அம்சம் உங்கள் உடலின் அமில கார (pH) சமநிலை மட்டுமே…!

அது என்ன அமில கார சமநிலை? கீழே உள்ள படத்தை பாருங்கள்.
அமிலம் மற்றும் காரத்தின் அளவீடானது 0 தில் இருந்து 14 வரை இருக்கும்.  ஒரு திரவத்தின் pH (அமில கார செறிவு) அளவு 7 ஆக இருந்தால் அது ஒரு நடுநிலை திரவம்.  அதாவது அந்த திரவம் அமிலமும் அல்ல காரமும் அல்ல.  மாறாக pH மதிப்பு 7 க்கு கீழே இருந்தால் அந்த திரவம் ஒரு அமிலம்.  அதுவே 7 க்கு மேலே இருந்தால் அது ஒரு காரம்.  

நம் உடலிலும் இந்த அமில கார செறிவானது (pH) உள்ளது. உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் ஒவ்வொரு விதமான pH மதிப்பை கொண்டிருக்கும். இவை அனைத்திலும் முக்கியமானது ரத்தத்தின் pH அளவு ஆகும்.  ஆரோக்கியமான உடலில் ரத்தத்தின் pH ஆனது 7.3 இலிருந்து 7.4 என்ற அளவில் இருக்கும்.  நமது உடலின் வெப்பநிலை எவ்வாறு சமநிலையில் உள்ளதோ அந்த அளவிற்கு நமது ரத்தத்தின் pH சமநிலையில் இருக்கவேண்டும்.  இதில் ஒரு சிறு மாற்றம் ஏற்பட்டாலும் நமது உடல் சமநிலையை நிலைநிறுத்த மிகவும் உச்சகட்ட ஏற்பாடுகளை மேற்கொள்ளும்.  எடுத்துகாட்டிற்கு, நமது எலும்பை உருக்கி அதைக்கொண்டு கார தன்மையை ரத்தத்தில் அதிகரிக்கும்.


“என்னப்ப காரம்னு சொல்ர அமிலம்னு சொல்ர pH னு சொல்ர இது என்ன அவ்ளோ important ஆ…??”


pH அளவானது உடலில் உள்ள ஒவ்வொரு செல்களையும், பல்வேறு விதமான சீரங்களையும் நேரடியாக பாதிக்கிறது.  மேலும் நம் உடலின் ஒட்டுமொத்த வளர்சிதைமாற்றமும் உடலின் காரத்தன்மையை பொறுத்தே அமைகிறது.  உடலின் அமிலத்தன்மை மிக மோசமான நிலையை அடைந்தால் செல்கள் அழிய தொடங்குகின்றன.  இந்நிலையை கவனிக்காமல் விட்டால் உடலின் ஒட்டுமொத்த இயக்கமும் தடைபட ஆரம்பிக்கும்.  இதய துடிப்பு முதல் மூளையின் நரம்பு சமிக்ஞைகள் வரை பாதிக்கபடும். வேறு மாதிரி சொல்ல வேண்டுமானால் மரணம் சம்பவிக்கும்…!


இங்கு மோசமான நிலைமை என்னவென்றால் நாம் அன்றாடம் உண்ணும் இட்லி, பொங்கல், வடை, பரோட்டா, அரிசி, சாம்பார், சிக்கன், மட்டன், முட்டை மற்ற அனைத்து வேகவைத்த உணவுகளும் உடலுக்கு அமில தன்மையை தருகின்றன.  நம் உடல் சமநிலையை காக்க படாத பாடு பட்டுகொண்டிருக்கிறது.


“உடம்பு எல்லாத்தையும் தானே சரிபன்னிக்கும்னு சொல்ற, ஆனா ஒரு ஜுரம் வந்தா கூட தானே சரி ஆகமேட்டேன்குது”  போன்ற வரிகளை பலமுறை மக்கள் கூற கேட்டிருக்கிறேன்.  அவர்கள் மேல உள்ள பத்தியை இன்னொரு முறை படிக்க வேண்டுகிறேன்.


“ரைட்டு.. எதோ வைரஸ், பாக்டீரியா, மலேரியா, சிக்குன்குனியா, கேன்சர் அப்படின்லாம் first part ல சொன்னியே அது எங்க..?”


இதற்க்கான பதிலை சிறிது சிறிதாக அடுத்து வரும் பதிவுகளில் பார்க்கலாம்.


- மருத்துவம் தொடரும்

Monday 6 March 2017

தற்சார்பு மருத்துவம் - அறிமுகம்


வணக்கம்..! “என்ன இது தற்சார்பு மருத்துவம்” என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது. இந்த கட்டுரையின் முடிவில் அதற்கான விடையை என் பார்வையில் தெளிவுபடுத்த முயற்சிக்கிறேன். மனித உடல் என்பது பல லட்சம் பரிணாம வளர்ச்சியின் உச்சம். குறிப்பாக மனித நரம்பு மண்டலம் மற்ற விலங்குகளை காட்டிலும் அபரிமிதமான வளர்ச்சி கொண்டது. இத்தகைய அற்புதமான ஒரு இயந்திரம் மேலும் ஒரு குறிப்பிட தகுந்த அம்சத்தை தன்னகத்தே கொண்டுள்ளது அதுதான் தன்னை தானே சரிசெய்து கொள்ளுதல். குறிப்பிட்ட சில உறுப்புகளை தவிர்த்து மனித உடலானது தனது அனைத்து செல்களையும் புதுப்பிக்கும் ஆற்றல் கொண்டுள்ளது என்பதில் நீங்கள் என்னுடன் உடன்படுவீர்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு இருப்பின் ஏன் சிறுநீரகம் செயலிழப்பு, இருதய கோளாறு முதலியவை ஏற்படுகின்றன? வினோதம்…!
     உடலில் இன்னும் ஒரு அற்புதமான அமைப்பு உள்ளது அதுதான் தற்காப்பு அல்லது நோய் எதிர்ப்பு. என்னை பொருத்தமட்டில் இந்த தற்காப்பு அமைப்பிற்கு ஈடு இணை இல்லை. இதனால் எத்தகைய நோய் கிருமிகளையும் எதிர்த்து போராடி உடலை பாதுகாக்க முடியும். இருப்பினும், கேன்சர், எய்ட்ஸ், மலேரியா, டைபாய்டு, சிக்குன் குனியா போன்ற நோய்கள் மனித உடலை தாக்கி மரணத்தையும் விளைவிக்கின்றன. எப்படி இது சாத்தியம்?
    சரி, நோய் வந்தவுடன் நாம் அதற்காக சில மருந்துகளை சாப்பிடுகிறோம் அவை உண்மையில் நோயை குணப்படுத்துகிறதா? இந்த கேள்விக்கு நாம் “ஆம்” என்று பதில் சொன்னால், உடலை பற்றிய கவனமும், அடிப்படையும் நாம் மிகவும் குறைவாக கொண்டுள்ளோம் என்பதாகும்.
“இவ்ளோ பேசுறியே உனக்கு இதெல்லாம் தெரியுமா??”
என்று நீங்கள் கேட்பது எனக்கு தெளிவாக கேட்கிறது 🙂 .. விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டின் அவர்களின் ஒரு வாக்கியம்,
“If I have seen further, it is by standing on the shoulders of giants”
– Albert Einstein
தமிழில்,
“எனது தற்போதைய கண்டுபிடிப்புகளுக்கு காரணம் எனது முன்னோர்களின் முந்தைய கண்டுபிடிப்புகள்”
“ரைட்டு ஓகே, ஆனா இத ஏன் எங்ககிட்ட சொல்ற??”
     உங்கள் குரல் மீண்டும் தெளிவாக கேட்கிறது 🙂 . நாம் அனைவரும் நம் வாழ்வில் பல விசயங்களை கற்கிறோம். அதை நம்மோடே வைத்துவிட்டோம் எனில் நம் அடுத்த தலைமுறை மீண்டும் ஆரம்ப புள்ளியில் இருந்து தொடர வேண்டி இருக்கும். நீங்கள் கற்றது, சோதித்தது, உணர்ந்தது, புரிந்தது மேலும் உலகத்தின் மீதான உங்கள் பார்வையை ஆவணப்படுத்துங்கள். உங்கள் தலைமுறை உங்கள் முடிவில் இருந்து தொடங்கட்டும். ஆகையால் சொத்து சேர்பதுடன், அறிவு செல்வத்தையும் சந்ததிக்கு கொடுக்க முயற்சிப்போம்.
     பீடிகை போட்டது போதும் விசயத்துக்கு வருவோம். இந்த தொடர் பதிவில் உடல் & மருத்துவம் பற்றி நான் அறிந்தவற்றை மற்றவர்களுடன் பகிர விரும்புகிறேன். என்னுடைய இந்த தேடலில் பல வியப்பான உண்மையை அறிந்ததுடன் அவற்றை நான் என்மேல் சோதனையும் செய்து பார்த்து உணர்திருக்கிறேன்.
“அதெல்லாம் இருக்கட்டும் இந்த கட்டுரையை நான் ஏன் படிக்கணும்??”
— உங்கள் Health Insurance ரத்து செய்ய
— உடல் ஆரோக்கியத்துடன் வாழ
— நோய் பற்றிய எண்ணமே இல்லாமல் வாழ
“இந்த மாதிரி சொல்றவன்களாம் ஒரு சாதாரண ஜுரத்தை கூட உடனடியாக சரி செய்ய மாட்டாங்க”
— சாதரண ஜுரம் மட்டும் அல்லாமல் கேன்சர், மலேரியா, அனைத்து விதமான வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை தொற்றுகள் மற்றும் பல நோய்களிலிருந்து தேறுவதற்க்கான நான் அறிந்து கொண்ட வழிமுறைகளை இங்கேப் பகிர உள்ளேன்.
     அது மட்டும் அல்லாமல், உடலின் அடிப்படை செயல்பாடுகளை பற்றியும் ஆராய்ந்து பகிர உள்ளேன். நான் இங்கு பகிரப் போகின்ற தகவல்கள் பல, நூல்களின் மூலம் நான் கற்றது.  இந்த தொடர் பதிவு, வெறும் பதிவாக மட்டும் அல்லாமல், அனைவரின் அன்றாட வாழ்வில் உபயோகப்படுத்தும் விதமாக அமையும் என நம்புகிறேன்.
– மருத்துவம் தொடரும்

90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி?


30 ஆண்டுகள் வளர கூடிய மரத்தை கூட வெறும் மூன்று மாதங்களில் வளர்ப்பது எப்படி?
இயற்கை விவசாயத்தில் ஒரு புதுமை, இயற்கை விவசாயத்தில் ஒரு புரட்சி. இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அய்யா மறைந்து விட்டார் என்று யார்? சொன்னது. அவர் இன்றும் பலரிடம் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். அத்தகைய ஒருவர் தான் விவசாயி அர்ஜூன் அவர்கள்.
90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி?
செடி நட்டு, அது மரமாக வளர ஆண்டுக் கணக்காகும். அதனால், மரக்கிளைகளை வெட்டி, நட்டு, மரங்களாக உருவாக்கும் முயற்சி செய்தேன். விதை போட்டு மூன்றாண்டுகளில் வளரக்கூடிய மரக்கன்றுகள், மரக்கிளைகளை வெட்டி நட்டால் 90 நாட்களிலேயே மரமாக வளர்ந்து விட்டன. மரக்கிளைகளை வெட்டி நட்ட ஆயிரம் மரங்கள் இராஜவல்லிபுரத்தைச் சுற்றி உள்ளன. இதை என் சொந்தச் செலவிலேயே செய்தேன். மேலும் எங்கள் ஊர் குளத்துக்கரையைச் சுற்றிலும் பனங்கொட்டைகளை சும்மா விதைத்து வைத்தேன். தற்போது சுமார் 2,000 பனைகள் குருத்துவிட ஆரம்பித்துள்ளன.
கடந்த மூன்றாண்டுகளில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், கோயில்கள், தனியார் நிறுவனங்களுக்கு 27 ஆயிரம் மரங்களை இலவசமாக வழங்கியுள்ளேன்” என்கிறார் அர்ஜுனன்.
.
90 நாட்களில் மரம் வளர என்ன செய்ய வேண்டும்?
# பெரிய மரத்தின் நடுத்தர அளவு உடைய கிளைகளின் கம்புகளை 6 அடி நீளத்தில் வெட்ட வேண்டும்.
# ஒரு சிமெண்ட் கோணிப்பையில் மண் நிரப்பி வைத்துக்கொண்டு, கம்பின் பச்சைத்தன்மை மாறுவதற்குள் நட்டு விட வேண்டும்.
# கால்நடைகளின் சாணம் போன்ற இயற்கை உரங்களே போதுமானது. குறைந்தளவு நீர் ஊற்றிவர வேண்டும்.
# நடப்பட்ட கம்பை அசைக்கவோ, மாற்றவோ கூடாது. கால்நடைகள் இலையை மேய்ந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இப்படிப் பராமரித்தால், 30 நாள்களில் தளிர ஆரம்பித்து விடும். 90 நாள்களிலிருந்து நிழல் கொடுக்கிற அளவுக்கு மரம் வளர்ந்துவிடும்.
# வேம்பு, அத்தி, மா, பூவரசு போன்ற தமிழக தட்பவெப்ப நிலைக்கு உகந்த அனைத்து மரங்களையும் இம்முறையைப் பயன்படுத்தி வளர்க்கலாம்.
.
ஆடு, மாடு, நாற்றைத் தின்னுடும். வெயிலில் காய்ஞ்சுடும்னு கவலையில்லாம ஒரு ஃபாஸ்ட் ஃபுட் மாதிரி ஒரு ஃபாஸ்ட் ட்ரீ ரெடி என்கிறார் அர்ச்சுனன்.
மரம் தேவைப்படும் கிராம பஞ்சாயத்துகள் விரும்பினால், ஒரு கிராமத்திற்கு 1,000 மரங்கள் வரை இலவசமாகக் கொடுக்கத் தயாராக உள்ளேன். தனிநபர்கள் என்றால், பயிற்சி தர தயாராக உள்ளேன்” என்கிறார் அர்ஜுனன். அவரை தொடர்புகொள்ள (9790395796, 9500378441, 9500378449)
.
அரசு கொஞ்சம் உதவினால்… 20 மீட்டர் இடைவெளியில் 700 கிலோ மீட்டர் தூரத்துக்கு சென்னை முதல் குமரி வரை நாற்கரச் சாலையில் 35 ஆயிரம் மரங்களை நட்டால் ஒரு மினி காட்டுக்குள் ஏஸிக்குள்ளே தமிழ்நாடே இருக்கும்.
ம்ம்… யாருக்கும் இந்த அருமை புரியலை,” என்று அங்கலாய்த்துக் கொள்கிறார் ஃபாஸ்ட் ட்ரீ அர்ச்சுனன்.அவரை தொடர்புகொள்ள (9790395796, 9500378441, 9500378449)

புன்னை ஒரு அதிசியம்


விவசாயிகளுக்கான ஓர் நற்செய்தி.
டீசலோடு போட்டி போடும் புன்னை…!
நாகப்பட்டினம் மாவட்டம், கண்டியன்காடு கிராமத்தைச் சேர்ந்த தீவிர விவசாயி ராஜசேகர். மின்சாரத்தையும், டீசலையும் நம்பாமல், “புன்னை, கைவிடாது என்னை…!” என்று தெம்பாகச் சொன்னபடி, தன் தோட்டத்துக்கு தேவைப்பட்ட போதெல்லாம் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருக்கிறார்.. புன்னை எண்ணெய் புண்ணியத்தால்….!
“டீசல் மோட்டார் பம்ப்செட்டுகளில், டீசலுக்குப் பதிலாக புன்னை எண்ணெயைப் பயன்படுத்தினால் பல மடங்கு செலவு குறையும். கூடுதல் இணைப்பாக சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும் இந்த மரத்தை, இயற்கை நமக்குத் தந்த வரம்ன்னு தான் சொல்லணும். இதுக்கு இலையுதிர் காலம்ன்னு ஒண்ணு கிடையாது. வருஷம் முழுக்க நிழல் கொடுக்கும். மழ வரப்போகுதுன்னா, ஒரு வாரத்துக்கு முன்னாடியே நமக்குச் சொல்லிடும். அதாவது, மரத்துல பூ பூத்துக் குலுங்கினா, கண்டிப்பா மறு வாரம் மழை பெய்யும். புயல் அடிச்சாக்கூட சாயாம நிக்கக்கூடிய மரம். இது கடற்கரையோர பூமி, சுனாமி வந்தப்பக்கூட இந்த மரங்களுக்கு ஒண்ணும் ஆகலனா பார்த்துக்கோங்க.. இந்த அளவுக்கு வலுவான மரம். இதுக்கு எத்தனை வருஷம் ஆயுள்ன்னு தெரியல.70 வருஷத்துக்கும் மேல் வயசுள்ள மரங்கள் கூட விதைகளைக் கொட்டுது என்ற புன்னையை வாழ்த்தித் தள்ளியவர்.
“5 ஹெச்.பி டீசல் மோட்டார் வெறும் 600 மில்லி புன்னை எண்ணெய் தான் ஊத்துறேன். வேற ஆயில் எதையும் கலக்கறதில்லை. இந்த 600 மில்லி ஊத்தறதுக்கே ஒரு மணி நேரம் ஓடுது. இதுவே டீசலா இருந்தா, ஒரு மணி நேரம் ஓடறதுக்கு 900 மிலி தேவைப்படும்.
ஒரு லிட்டர் டீசலோட விலை 56 ரூபாய் ஆனா, ஒரு லிட்டர் புன்னை எண்ணெய் தயாரிக்க கிட்டத்தட்ட 10 ரூபாய் தான் செலவாகுது.
மழை இல்லாத காலத்துல தான் மோட்டார் தேவை. அப்படிப் பார்த்தா வருஷத்துக்கு 5 மாசத்துக்குத் தான் மோட்டார் ஓடணும். அதுக்கு 75 லிட்டர் எண்ணெய் தேவைப்படும் இதைத் தயாரிக்கறதுக்கு 800 ரூபாய் தான் செலவு. இதே அளவு டீசலுக்கு.. 4200 ரூபாய் செலவாகும் என்று கணக்கு வழக்கோடு சொல்கிறார் ராஜசேகர்.
தொடர்புக்கு:அலைபேசி எண்: 9751002370.
{கிடைத்த செய்தியை பகிர்ந்துள்ளேன் அனேகமாக யாருக்கேனும் உபயோகமாகலாம்.}