நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

Sunday 14 May 2017

நானும் அல்சரும்..! - முடிவு



சென்ற அத்தியாயத்தில் நெஞ்செரிச்சலினால் ஏற்படும் அறிகுறிகளை பற்றி பார்த்தோம். அந்த அத்தியாயத்தை படிக்காதவர்கள் இங்கே சென்று படித்துவிடுங்கள்.  ஏனெனில் இந்த கட்டுரை அதன் தொடர்ச்சி ஆகும்.


“எல்லாம் படிச்சாச்சி நி விசயத்துக்கு வா..”


இதோ வந்துட்டேன் :-).  போன அத்தியாத்தை நாம் ஒரு முக்கியமான தடயத்தோடு முடித்திருந்தோம்.  அந்த தடையம் வேறு ஒன்றும் இல்லை நாம் சாதரணமாக குடிக்கும் மோர்..!


“சரிப்பா அத வச்சி என்ன புரிஞ்சிக்கிட்ட..?”


சொல்கிறேன் அதற்க்கு முன்பு அய்யா நம்வாழ்வரின் ஒரு கருத்தை கூற விழைகிறேன்.  பயிர்களுக்கு தீமை செய்யும் பூச்சிகளை எதிர்க்க நன்மை செய்யும் பூச்சிகளும் நம் பயிர்களின் ஊடே எப்போதும் இருக்கிறது என்று கூறி உள்ளார்.  இத்தகைய சமநிலையானது இயற்கையில் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது.  


“அதுக்கும் மோர்க்கும் என்னயா சம்பந்தம்..?”


மேலே படியுங்கள்.  என் முதல் தடயத்தையும், அய்யாவின் அந்த கூற்றையும் பொருத்திப்பார்க்கும் போது என்னால் ஒரு விஷயத்தை உணரமுடிந்தது.  என் வயிற்றில் மோர் குடிக்கும்போது நெஞ்செரிச்சல் குறைகிறது எனில்.  மோரில் உள்ள எதோ ஒன்று என் வயிறை சமநிலைக்கு கொண்டுவருகிறது.  சரி மோரில் என்ன இருக்கிறது என்று யோசித்தால், அதில் இருப்பது உடலுக்கு நன்மை செய்யும் நுண்யுரிகள்.  சரி,  மோர் குடித்தாலும் சில மணிநேரங்கள் கழித்து மீண்டும் நெஞ்செரிச்சல் வர காரணம் என்ன….?????


நன்மை செய்யும் நுண்ணுயிர்களால் எனக்கு சற்று நிவாரணம் கிடைக்கிறது எனில், என் வயிற்றில் தீமை செய்யும் நுண்யிர்களால் மீண்டும் எனக்கு நெஞ்செரிச்சல் உருவாகிறது என்று தோன்றியது..!  இதோ இந்த எண்ணம்தான் என் முழு தீர்விற்கு ஆதாரமானது.


“பில்ட்டப் போதும்,  மேல சொல்லு…”


ரைட்டு ஓகே :-) மேற்கொண்டு போவதற்கு முன்பு,  நான் நெஞ்ஜெரிச்சளுக்காக ஒருமுறை அலோபதி மருத்துவமனைக்கு சென்றிருந்தேன் அங்கு அவர்கள் என்னை கேட்ட கேள்விகள்.  


கேள்வி: உங்களுக்கு stress அதிகமா இருக்க?
பதில்: அப்படினா என்ன?
கேள்வி: நீங்க junk food சாப்பிடுவிங்கள?
பதில்: அப்படினா என்ன?
கேள்வி: நீங்க காரமா சாபிடுவிங்களா?
பதில்: இல்லை


இம்மாதிரி கேள்விகள் சென்றது. உண்மையில் மன அழுத்தம், மசாலா உணவுகள் நமக்கு நெஞ்ஜெரிச்ச்சலை தருவதில்லை.  நமக்கு நெஞ்செரிச்சல் வர காரணம் நம் வயிற்றில் போதுமான ஜீரண அமிலம் இல்லை….!  


“அது எப்படி வயித்துல ஆசிட் கம்மி ஆச்சி…?”


மிகச்சரியான கேள்வி…!  பதில்…. Helicobacter Pylori…


“அப்படினா..?”


Helicobacter Pylori என்பது ஒருவகை பாக்டிரியா.  இந்த நுண்ணுயிரி தான் எனது அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் காரணம்.  இந்த பாக்டிரியாவானது நம் வயிற்றின் கோழை படலத்தின் உள்ளே சென்று அங்கிருந்து கொண்டு கொஞ்சம் கொஞ்சம்மாக நம் வயிற்றின் அமிலத்தன்மையை குறைக்கும்.  இதற்க்கு காரணம் இதனால் நம் வயிற்றின் அமிலதன்மையில் வாழ முடியாது.  தான் வாழ்வதற்கு ஏற்றவாறு அமோனியா என்ற காரத்தன்மையை நம் வயிற்றில் உற்பத்தி செய்து கலக்கிறது.  இதனால் நம் வயிற்றின் அமிலத்தன்மை குறைந்து காரத்தன்மை அதிகரிக்கிறது.  இந்த காரதன்மையில்தான் மற்ற நுண்ணுயிரிகள் செழித்து வளரும்.  ஆகையால் ஒரு பெரும் நுண்ணுயிரிகளின் கூட்டமே நம் வயிற்றில் தொற்றுகிறது.  இந்த நிலையில் நாம் என்ன சாப்பிட்டாலும் அது அந்த நுண்ணுயிரிகளால் நொதித்து அதன் மூலம் காற்று அழுத்தம் ஏற்பட்டு நாம் உண்ட உணவு நம் வாய்க்கு திரும்ப மேலெழும்புகிறது…!!!  இது கிட்டத்தட்ட நம் தோசை மாவை புளிக்க செய்வதற்கு இணையானது.


இந்த நிலையில் நாம் எவ்வளவுதான் ஆரோக்கியமான உணவை உண்டாலும் அது ஒழுங்காக செரிக்காது இதன் விளைவு நம் உடலில் மிகபெரிய அளவில் உட்டசத்து குறைபாடு ஏற்படுகிறது.  மிக குறிப்பாக வைட்டமின் பி குறைபாடு ஏற்படுகிறது.  இது மிக பெரிய பிரச்சனை காரணம் நம் உடலால் வைட்டமின் பிஐ மற்ற வைட்டமின்களை போன்று கல்லீரலில் சேமிக்க முடியாது.  ஏனெனில் இது நீரில் கரயகூடிய வைட்டமின்.  நம் உடலில் உண்ட உணவு செரிப்பதர்க்கும் அது சிறு சிறு அமினோ அசிட்களாக மாறுவதற்கும் வைட்டமின் பி தான் அடிப்படை.  உடலின் சக்தி பெருக்கத்திற்கும் இதுவே அடிப்படை.  இப்போது நம் முதல் அத்தியாயத்தில் படித்த அறிகுறிகளை நினைத்து பாருங்கள் அனைத்தும் ஒத்துபோகும்..!


“இவ்ளோ விசயம் இருக்கா இதுல..  சரி அப்புறம் என்ன பன்ன..?”


இந்த விசயங்களை எல்லாம் நான் அறிய எனக்கு மிக முக்கியமான அடுத்த தடயமாக அமைந்தது எழுமிச்சை பழம்..?  நான் சிறுவயதில் இருந்தே நிறைய எலுமிச்சை ரசம் குடிப்பேன்.  என் வயிறு பிரச்னைக்கு பிறகு நான் எலுமிச்சை ரசம் குடித்தால் அடுத்த அரை மணி நேரத்தில் எனக்கு அடுக்கு தும்மல் வந்துவிடும்.  இந்த தடயத்தை வைத்து ஆராயும்போது தான் இது வைட்டமின் பி குறைபாடால் வருவது என்று அறிந்தேன்.  அந்த விவரத்தை இங்கே (http://www.chiark.greenend.org.uk/~vclarke/citric.html) அறியலாம்.  இவ்வாறு இதையும் H. Pylori ஐயும் சம்பந்தபடுத்த முடிந்தது.  


எனக்கு நன்றாக நினைவில் உள்ளது.  அப்போது நான் வாழை பயிற்சி பட்டறையில் உறங்கிகொண்டிருந்தேன் நேரம் அதிகாலை 2 மணி.  மூக்கில் இருந்தது ஒரே சளி தும்மல். வேறொன்றும் இல்லை காரணம், முந்தைய நாள் காலை வகுப்பில் lemon juice :-) ஒரு குவளை அருந்தி இருந்தேன்.  வெறுத்துபோய் எழுந்து இணையத்தில் தேடும்போதுதான் மேலே குறிப்பிட்ட அந்த இணைப்பு கிடைத்தது.  அதற்க்கு முன்பு பலமுறை தேடியும் கிடைக்காத பதில் அன்று இரவு கிடைத்தது.  ஏனோ அன்று முதல் மனித பிறப்பின் நோக்கமே தன்னை அறிதல் என்று தோன்ற ஆரம்பித்தது.


“மொக்க போடாத.. விசயத்துக்கு வா…”


ஓகே... ஓகே… உடனே மறுநாள் காலை எழுந்து B complex மருந்து வாங்கி சாப்பிட்டேன். விலை 1 ரூபாய்.  அதிசயம் அடுத்த 1 மணி நேரத்தில் தும்மல் காணமல் போனது. உடலில் சக்தி கூடுவதை உணர்தேன்.  மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.  சரி உடனடி தீர்வை கண்டாயிற்று ஆனால் அடிப்படை பிரச்சனை இன்னும் அப்படியே இருக்கிறதே, அதாங்க நம்ம H. pylori.


வாசகர்களை கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்ட அய்யா நம்வாழ்வாரின்
கூற்றை நினைவுபடுத்தி கொள்ளுமாறு கேட்டுகொள்கிறேன்.  இந்த H. Pylori ஐ antibiotics மருந்துகள் மூலமும் அழிக்க முடியாது.  நானே அதற்க்கு உதாரணம்.  நான் amoxi, PPI போன்ற மருந்துகளை சோதனை அடிப்படையில் மிக மிக குறைந்த நாட்களே சாப்பிட்டு இருக்கிறேன்.  அனால் நிவாரணம் இல்லை.  அப்போதுதான் மோர் பற்றிய நியாபகம் வந்தது.   ஆக இந்த கிருமியை ஒழிக்க வேண்டுமானால் நாம் மாற்று கிருமியின் மூலமே அதை சாதிக்க முடியும் என்று தோன்றியது.  இந்த பார்வையில் தேடும்போதுதான் எனக்காகவே தயாரித்தது போன்ற ஒரு மருந்து கிடைத்தது அதற்க்கு பெயர் pylopass (probiotic).  இந்த மருந்தானது Lactobacillus reuteri என்ற உடலுக்கு நன்மை புரியும் நுண்ணுயிரியை மிக அதிக அளவில் கொண்டுள்ளது.  இதை இணையத்தில் இருந்து வங்கினேன்.  மறுபடியும் அதிசயம் என் நெஞ்செரிச்சல் மூன்றே நாட்களில் மிக பெரிய அளவில் குறைந்தது.  தொடர்ந்து 30 நாட்கள் அந்த மருந்தை எடுத்தேன் முழு நிவாரணம் கிடைத்தது.  அந்த மருந்தை நிறுத்தி கிட்டதட்ட 30 நாட்களுக்கு மேல் ஆகிறது.  இதுவரை நெஞ்செரிச்சல் வரவில்லை.  அனைத்து உணவுகளையும் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக்கொண்டு வருகிறேன்.


என்னதான் கிருமியை ஒழுத்துவிட்டலும், என் வயிறானது தனது ஒட்டுமொத்த சக்தியை இழந்து இருந்தது.  அனால் இந்த நேரத்தில் வயிற்றை பலபடுத்தும் உணவுகளான பாகற்காய், முருங்கை, திரிபாலா சூரணம் முதலியவற்றை எடுக்க ஆரம்பித்தேன்.  அதிசயம் அனைத்தும் இப்போது ஒழுங்காக செரித்து மிக நல்ல பலன்களை தந்தன.  தற்போது என் வயிறு என்ன சொல்கிறதோ அதுவே எனக்கு வேத வாக்கு.  அது பசி என்றால் மட்டுமே உண்கிறேன்.  அதுவும் போட்டிபோட்டு கொண்டு உணவுகளை அரைத்துதள்கிறது.  என் சிறுவயதில் நான் இருந்த சக்தி நிலைக்கு மிக வேகமாக முன்னேறி கொண்டிருக்கிறேன்..!


  • ஆய்வு சிறப்பாக முடிந்தது நன்றி…!

Saturday 13 May 2017

நானும் அல்சரும்..! - தொடக்கம்




"என்னடா இது தலைப்பு நானும் அல்சரும்..?"
என்று யோசிக்கிறீர்களா?  ஆம் இந்த கட்டுரையில் வயிற்று புண் பற்றி தான் பேசப்போகிறேன்.   எனக்கு நன்றாக நினைவில் உள்ளது எனது முதல் வயிற்று புண் எரிச்சல்.  ஒருநாள் என் தம்பியோடு சேர்ந்து கிணற்றில் குளித்து கொண்டிருக்கும்போது திடீரென்று நெஞ்செரிச்சல் வந்தது.  ஏன் என்று தெரியவில்லை அந்த எரிச்சலை பொருட்படுத்தவும் இல்லை.  நான் அப்பொழுது கிட்டத்தட்ட பதினொன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன் வயது 17.  அன்றிலிருந்து கிட்டத்தட்ட எனது 28 ஆம் வயதில்தான் அதற்க்கான உண்மையான காரணத்தை கண்டுபிடித்து சரிசெய்தேன்.  இந்த கட்டுரையில் என் வயிற்று புண்ணை சரி செய்வதற்காக நான் மேற்கொண்ட பல விசயங்களையும் கடந்து வந்த பாதையையும் விவரிக்க இருக்கிறேன்.  இப்போது அல்சர் உள்ளவர்கள் இந்த கட்டுரையை நிச்சயம் படியுங்கள் இது உங்களுக்கான ஒரு தீர்வாக இருக்கும்.

அல்சரின் ஆரம்ப காலத்தில் நான் அதை பெரிதாக பொருட்படுத்தவில்லை.  அதன் விளைவாக பிரச்சனையின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே சென்றது.  ஒரு கட்டத்தில் நான் என்ன சாப்பிட்டாலும் அடுத்த ஒரு மணிநேரத்தில் எனக்கு நெஞ்செரிச்சல் வந்துவிடும் என்ற நிலைமை உருவாகிவிட்டது.  மிகவும் வருத்தமாக இருந்தது.  நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதில் தீவிர நம்பிக்கை கொண்டவன் நான்.  ஆகையால் இந்த நெஞ்செரிச்சல் ஒரு பெரும் வருத்தத்தை எனக்கு உருவாக்கிவிட்டது.  சரி, இதை எப்படியாவது சரி செய்ய வேண்டும் என்கிற அளவுக்கு நிலைமை மோசமானது எனது 25 வது வயதில்தான்.  மிக தீவிரமாக ஆராய ஆரம்பித்தேன்.  நெஞ்சு எரிச்சலை சரி செய்ய எந்த அளவுக்கும் செல்ல தயாராய் இருந்தேன் அனால் அலோபதி மருத்துவம் மட்டும் வேண்டாம் என்ற முடிவை எடுத்திருந்தேன்.  இந்த முடிவு எவ்வளவு முக்கியாமான முடிவு என்பதை என் பிரச்சனை சரி ஆனா பிறகு உணர்ந்தேன்.  சரி விசயத்திற்கு வருவோம்.  எனக்கு வந்த பிரச்சனையை சரியாக சொல்ல வேண்டுமெனில், ஆங்கிலத்தில் GERD (Gastroesophageal reflux disease) என்பார்கள்.

“என்னப்பா இது GERD? ஒன்னும் புரியலையே..”

GERD என்பது, நாம் உண்ணும் உணவு சாப்பிட்ட சில மணி நேரத்திற்கு பிறகு சிறிது நேரத்தில் நமது வாயிற்கு திரும்ப வருவது.  அவ்வாறு வரும்போது மிகவும் புளிப்பு சுவையாக இருக்கும்.  அது வேறொன்றும் இல்லை நமது வயிற்றின் ஜீரண அமிலம்.  உணவு மண்டலத்தை பற்றி பேசும்போது நாம் இவ்வாறு ஒரு வாக்கியத்தை கேட்டிருப்போம் “தலை கீழா நின்னு தண்ணி குடிச்சாலும் தண்ணி திரும்ப வாய்க்கு வராது”  இதற்க்கு காரணம் நம் வயிறும் உணவு குழலும் இணையும் இடத்தில் ஒரு சவ்வு உள்ளது.  அந்த சவ்வானது ஒரு பக்கம் மட்டுமே திறக்கும் சவ்வாகும் அதற்கு ஆங்கிலத்தில் LES (lower esophageal sphincter) என்று அழைப்பார்கள்.  இந்த சவ்வானது உணவு பொருள்களை உணவு குழாயில் இருந்து வயிற்றிற்கு அனுப்புமே தவிர வயிற்றில் இருந்து உணவானது திரும்ப உணவு குழாயிக்கு வர அனுமதிக்காது.  அனால் நெஞ்செரிச்சல் உள்ளவர்களுக்கு உணவாது வயிற்றில் இருந்து திரும்ப மேலெழும்பி வரும்.  நம் வயிரானது மிக வீரியம் உள்ள அமிலத்தை தாங்குவதற்கு இயற்க்கையாகவே ஒரு கோழை படலம் வயிற்றின் உட்புறத்தை பாதுகாக்கிறது.  ஆனால் அத்தகைய படலமானது நமது உணவுகுழலுக்கு கிடையாது.  ஆகையால் நாம் உண்ட உணவானது வயிற்றில் இருந்து மேல் நோக்கி வரும்போது மிக அதிக அமில தன்மையில் இருப்பதால் மிக அதிக எரிச்சலை உணவு குழாயில் உண்டாக்கும்.  இதையே நாம் நெஞ்செரிச்சல் என்கிறோம்.  இதை கவனிக்காமல் விட்டால் மிக தீவிரமான விளைவுகளை உண்டாக்கும்.  

“அது எப்படி ஒரு சாதாரண நெஞ்சிரிச்சல் தீவிர பிரச்னையை உண்டாகும்..?”

நெஞ்சிரிச்சல்  என்றால் என்னவென்று பார்த்தோம் அனால் அது ஏன் வந்தது? எப்படி வந்தது?  போன்ற கேள்விக்கு பதில் கண்டறிந்தோம் எனில் மேலே கேட்டகப்பட்ட கேள்விக்கு சுலபமாக பதில் அறியலாம்.  

எனக்கு நெஞ்சிரிச்சல் வந்தபோது நான் பல உணவுகளை சோதித்து பார்த்திருக்கிறேன்.  உதாரணத்திற்கு, மிளகு ரசம், ஆப்பிள், வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு, பிரியாணி, வாழை பழம், கருப்பு உப்பு, வாழை தண்டு, வெறும் பழங்கள், மணத்தக்காளி, மோர், வினிகர், முட்டைகோஸ் ஜூஸ் இன்னும் பல.  என் நண்பர்களிடம் வாரத்திற்கு ஒரு முறை ஏதாவது ஒரு உணவை குறிப்பட்டு அது நெஞ்ஜெரிச்சலுக்கு நன்றாக வேலை செய்கிறது என்று சொல்லி பெரும் தலை வேதனையை அவர்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறேன் :-) .  

“முயற்சி செய்த எந்த உணவுமே பிரச்சனையை சரி செய்யவில்லையா?”

ஒவ்வொரு உணவும் ஒரு சில நாட்கள் நிவாரணம் அளித்தது.  குறிப்பாக மோர் பல மாதங்களுக்கு நிவாரணம் அளித்தது.  தினமும் மோர் குடிக்க ஆரம்பித்தேன்.  அனால் ஒரு கட்டத்தில் மோர் குடித்தாலும் நெஞ்செரிச்சல் தொடங்கிவிடும் ஆகையால் அதையும் கைவிட்டேன்.  குறிப்பிட்டு சொல்லகூடிய இன்னொரு உணவு ஆப்பிள்.  எனக்கு நெஞ்செரிச்சல் வரும்போதெல்லாம் ஆப்பிள் சாப்பிட்டால் உடனே கட்டுப்படும் அனால் பிரச்னை தீராது.

இவ்வாறு பல சோதனைகளை என் உடம்பில் செய்து பார்த்தேன் ஆனால் எதுவும் சரியாகவில்லை.  சித்த மருத்துவமனைக்கும் சென்று பார்த்தேன் அதுவும் சரியாகவில்லை.  ஒரு கட்டத்தில் வெறுத்துபோனேன்.  அறிவியல் தொழில் நுட்பம் இவ்வளவு வளர்த்திருக்கும் இக்காலத்தில் ஒரு வயிறு பிரச்சனையை சரி செய்ய முடியாத? போன்ற பல கேள்விகள் மனதிற்கு வந்தது.  

“அப்பறம் எப்படிப்பா சரி ஆச்சி..?”

ஒரு கட்டத்தில் இதெல்லாம் வேலைக்கு ஆகாது என்று உணர்ந்து என் உடலில் தோன்றும் அறிகுறிகளை மிக கவனமாக ஆராய ஆரம்பித்தேன்.  இந்த நிலையில் தான் என் உடலின் மொழியை நான் புரிந்து கொள்ள ஆரம்பித்தேன். மிக உனனதமான நண்பன் நம் உடல்.  தினமும் நம்மிடையே பேசிக்கொண்டிருக்கிறது நாம்தாம் கவனிப்பதில்லை.  

“சரி என்ன அறிகுறிலாம் தெரிஞ்சது..?”

பல அறிகுறிகளை கண்டறிந்தேன்.

1. உணவு சாப்பிட்ட உடன் சோம்பல்.
2. தினமும் காலையில் தும்மல்.
3. மாலை நேரத்தில் கண்கள் சிவத்தல்.
4. தீவிர நெஞ்செரிச்சல்.
5. எப்போதும் சோர்வு.
6. மலம் மோசமாக வெளியேறியது.  சரியாக செரிக்கவில்லை என்றால் எப்படி கூழ் மாதிரி போகுமோ அப்படி.

இன்னும் பல அறிகுறிகள்.  எனது நண்பர்கள் கணேஷ் மற்றும் மைதிலி அவர்களிடமும் என் மனைவி கௌரி இடமும் அனைத்து அறிகுறிகளையும் சொல்லி அவர்களை அரை வைதியர்காளாக்கிவிட்டேன் :-)

“சீரியஸ்சா போய்கிட்டு இருக்கும் போது காமடி பண்ணாத, அப்புறம் என்ன ஆச்சி..?”

எனக்கு நன்றாக நினைவில் உள்ளது, மோர் புளித்து இருப்பதால் அதை குடித்தால் நெஞ்செரிச்சல் அதிகம் ஆகும் என்று நினைத்து பல நாட்கள் அதை குடிக்காமல் இருந்தேன்.  வாழை (An NGO for education) பயிற்சி பட்டறை செல்லும் போது அங்கு தவறாமல் மோர் குடிப்பேன் காரணம் சுவையாக இருக்கும் :-) (ஒரு கூட்டமே அந்த மோருக்கு அடிமை).  இந்த சம்பவம்தான் என் தீர்விற்கு முதல் படி.  இந்த தடயம் தான் என் யோசனையை வேறு தளத்திற்கு கொண்டுசென்றது.  அதன்மூலம் தீர்வையும் அடைந்தேன்.  அடுத்த இறுதி அத்தியாயத்தில் பிரச்சனையின் மூலத்தையும் அதன் தீர்வையும் விரிவாக பார்ப்போம்.
  • ஆய்வு தொடரும்