நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

Tuesday 26 July 2016

இயற்கை/மூலிகை பூச்சி விரட்டி மருந்துகள்



பூச்சி விரட்டிகள் தயார் செய்தல்
உழவுத் தொழிலில் ஒரு சில பூச்சிகள் பயிர்களை அழித்து விடுகின்றது. இதனால் செயற்கை உழவுத் தொழிலில் பூச்சிகளை கட்டுப்படுத்த பூச்சிகொல்லி மருந்துகள் பயன்படுத்தபடுகிறது இதனால் நாம் உண்ணும் உணவும் மெல்ல நஞ்சாகி விட்டது மற்றும் இயற்கை வளம் முழுமையாக அழிக்கபட்டு வருகிறது. ஆனால் இயற்கை உழவுத் தொழிலில் பூச்சிகளை கட்டுப்படுத்த இயற்கை முறையில் இயற்கை பூச்சி விரட்டி கையாளப்படுகிறது. இதனால் நாம் உண்ணும் உணவு ஆரோக்கியமாக உள்ளது மற்றும் இயற்கை வளம் முழுமையாக பாதுகாத்து வரப்படுகிறது.
பூச்சிகளை விரட்டுவதற்கு சில இயற்கைக் கரைசல்கள் பயன்படுகின்றன. இவற்றில் உள்ள அடிப்படையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்த அடிப்படையை நாம் புரிந்து கொண்டால் நம்மால் எந்த ஒரு சூழ்நிலையிலும் நல்ல பூச்சி விரட்டியை தயார் செய்து கொள்ள முடியும். பூச்சிகளைக் கொல்வது நமது நோக்கம் கிடையாது. அவற்றை விரட்டுவதே நோக்கம். இயற்கை வேளாண்மையில் நமக்கு எல்லா உயிரிங்களும் ஏதாவது ஒரு வகையில் நன்மையையே செய்கின்றன.
பின்வரும் இலை தழைகள் பூச்சிகளை விரட்டப் பயன்படும்
1. ஆடு, மாடுகள் உண்ணாத இலை தழைகள்-  ஆடுதொடா, நொச்சி போன்றவை
2. ஒடித்தால் பால் வரும் இலை தழைகள்- எருக்கு, ஊமத்தை போன்றவை
3. கசப்புச் சுவை மிக்க இலை தழைகள்- வேம்பு., சோற்றுக் கற்றாழை போன்றவை
4. உவர்ப்பு சுவை மிக்க இலை தழைகள்- காட்டாமணக்கு போன்றவை
5. கசப்பு உவர்ப்பு சுவைமிக்க விதைகள்- வேப்பங்கொட்டை. எட்டிக் கொட்டை
இந்த வகையான செடிகளில் இருந்து ஊறல் போட்டு எடுக்கப்படும் சாறு அல்லது காய்ச்சி வடித்த நீர் போன்றவை மிகச் சிறந்த பூச்சி விரட்டியாகச் செயல்படுகின்றன.
இந்தப் பூச்சி விரட்டிகள் ஒருவித ஓவ்வா மணத்தை ஏற்படுத்துகின்றன. பொதுவாக புழுக்கள் மணத்தைக் கொண்டுதான் பயிர்களைக் கண்டறிகின்றன. இதனால் மணம் பிடிபடாத காரணத்தால் அவற்றால் பயிர்களைத் தின்ன முடிவதில்லை. மூலிகைகளும். சாணம். சிறுநீர் கரைசல்களும் வெறுப்பூட்டும் நெடியை ஏற்படுத்துவதால் பூச்சிகளும். புழுக்களும் விலகிச் செல்கின்றன. பல பூச்சிகள் உண்ணாமல் பட்டினி கிடக்கின்றன. இன்னும் பூச்சிகள் தவறித் தின்றுவிட்டு வயிற்றுக்குள் தொல்லை ஏற்பட்டு இறந்துவிடுகின்றன. இதனால் முட்டை பொரிப்பது குறைச்து விடுகிறது. இனப்பெருக்கம் தடைப்பட்டு விடுகிறது. எண்ணிக்கையும் குறைந்து விடுகிறது. தப்பியவை ஊனமடைகின்றன. இவற்றைப் பறவைகள் எளிதில் கொத்திக் சென்று விடுகின்றன.
மாதிரி
சோற்றுக் கற்றாழை அல்லது பிரண்டை
எருக்கு அல்லது ஊமத்தை
நொச்சி அல்லது பீச்சங்கு அல்லது சீதா இலை
வேம்பு அல்லது புங்கம்
உண்ணிச் செடி அல்லது காட்டாமணக்கு அல்லது ஆடாதொடை
மேலே சொன்ன தழைகளில் ஒவ்வொன்றிலும் 2 கிலோ எடுத்துக் கொள்ளவும் ஆக 10 கிலோ இலைகளுடன் முதலில் சொன்ன விதைகளில் எதாவது ஒன்றை 100- 200 கிராம் எடுத்துப் பொடி செய்து கொள்ள வேண்டும். இவற்றை கலந்து ஊறல் முறையிலும் வேகல் முறையிலும் பூச்சி விரட்டிகள் தயாரிக்கலாம்.
ஊறல் முறை
இலைகளையும். விதைகளையும் 2 கிலோ வீதம் எடுத்துக் கொண்டு செய்து இடித்து இலை மூழ்கும் அளவிற்கு 12 லிட்டர் மாட்டச் சிறுநீர் 3 லிட்டர் சாணக் கரைசல் சேர்த்து 7 முதல் 15 நாட்களுக்கு ஊறவிட வேண்டும். இதனால் இலைகள் கலந்து கூழாக மாறிவிடும். இவற்றை 1 லிட்டருக்கு 10 லிட்டர் நீர் கலந்த பயிர்களில் அடிக்கலாம்.
மூலிகை பூச்சி விரட்டி தயாரிக்கும் முறை
மூலிகை பூச்சி விரட்டி தயாரிக்க தேவையான தாவரங்கள் கசப்புத் தன்மையுள்ள இலைகள் (வேம்பு) ஒடித்தால் பால் வரக்கூடிய இலைகள் (காட்டாமணக்கு) ஆடுதிங்காத இலைகள் (ஆடாதோடை) எருக்கு, நொச்சி, போன்ற இலைகளில் ஒவ்வொன்றிலும் 2 கிலோ வீதம் எடுத்துக் கொள்ளவும். அவற்றை இடித்து சிறு துகள்களாக எடுத்துக் கொண்டு ஒரு பிளாஸ்டிக் டிம்மில் போட்டு ஒரு கிலோ இலைகளுக்கு ஒரு லிட்டர் கோமியம் என்ன விகிதத்தில் சேர்த்து நன்கு கலக்கி இலைகள் மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். 3 நாட்களில் இக்கரைசல் தயாராகும். இவற்றை தினமும் காலை, மாலையில் குச்சி வைத்து நன்கு கலக்கி விட வேண்டும். பிறகு வடிகட்டி 10 லிட்டர் தண்ணீருக்கு 200 மில்லி என்ற அளவில் கலந்த பயிர்களில் தெளித்தால் பூச்சிகள் நம்முடைய வயலுக்கு வராது. இவற்றை பூச்சி விரட்டியாக பயன்படுத்தலாம். செலவும் குறைவு பயிர் பாதுகாப்பாகும்.
இயற்கை மூலிகை பூச்சி விரட்டி தயார் செய்வதற்காக ஆடு திங்காத தழைகள், ஒடித்தால் பால் வரக்கூடிய இலைகள், கசப்பு தன்மையுள்ள இலைகள் ( ஆட தோடை, வேப்பிலை, எருக்கம் இலை, காட்டாமணக்கு, ஆவாரம் இலை, நொச்சி இலை இவைகளில் தலா 5 வகையான இலைகளில் தேர்வு செய்து ஒவ்வொரு தலைகளிலும் 2 கிலோ வீதம் சேகரித்து அவற்றை இடித்து இலைகள் மூழ்கும் அளவு ( மாட்டு சிறு நீர் ) கோமியம் ஊற்றி வைக்க வேண்டும். பிறகு தினமும் நன்றாக 3 வேளையும் குச்சியை வச்சு எதிர் எதிர் திசையில் சுமார் 15 முறை நல்லா கலக்கி விட, 3 நாட்களில் இவை தயாராகிவிடும். 10 நாள் கழித்து 10 லிட்டர் தண்ணீரில் அரை லிட்டர் (500 மில்லி) இந்த மருந்தை கலந்து இதுகூட காதிசோப்பு இல்லாட்டி சோறு வடிச்ச கஞ்சி கலந்து பயிருக்கு தெளிக்க வேண்டும்.
இது பூச்சி கொல்லி அல்ல, பூச்சி விரட்டியாகதான் இந்த தாவரக் கரைசல் வேலை செய்யும். இதன் நாற்றம் தாங்கமுடியாமல்  பூச்சியெல்லாம் ஓடிப்போயிடும்.
இயற்கை/மூலிகை பூச்சி விரட்டி மருந்துகள் இவை:
தசகவ்யா
பீஜாமிர்தம்
அக்னி அஸ்திரம்
பிரம்மாஸ்திரம்
மண்பானை செடித்தைலம்
அரப்பு மோர் கரைசல்
வேம்பு புங்கன் கரைசல்
நீம் அஸ்திரா
சுக்கு அஸ்திரா
சோற்றுக்கற்றாழை பூச்சிவிரட்டி
வேப்பங்கொட்டை பூச்சிவிரட்டி
மஞ்சள் கரைசல்
இஞ்சி கரைசல்
இஞ்சி,பூண்டு,மிளகாய் கரைசல்
துளசி இலை கரைசல்
பப்பாளி இலை கரைசல்
வசம்பு– பூச்சிவிரட்டி
பொன்னீம் பூச்சிவிரட்டி
ஒட்டு திரவம்
விளக்குப் பொறி
இனக்கவர்ச்சி பொறி
ஒட்டும் பொறி
தசகவ்யா 
தசகவ்யா என்பது பஞ்சகவ்யாவில் மேலும் சில தாவரங்களின் சாறுகளைச் சேர்த்து மேம்படுத்தப்பட்டதாகும். இதனால் பஞ்சகவ்யா மேலும் மெருகேற்றப்பட்டு நல்லபயனளிக்கிறது. இதைப் பயிரின் மீது தெளிக்கும் போது பெரும்பாலான பூச்சிகளைக் கட்டுப்படுத்துகின்றது. நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.
தசகவ்யா தயாரிக்கும் முறை
தசகவ்யா தயாரிப்பதற்கு தேவையான பூச்சிகளையும் நோய்களையும்விரட்டக்கூடிய ஐந்து மூலிகைச் செடிகளை எடுத்துக் கொள்ளவேண்டும். அவைகளானவை.
ஆடாதொடை (Adhatoda vasaca)1 kg.
ஊமத்தை (Datyra metal) 1 kg.
நொச்சி (Vetex negundo) 1 kg.
வெள்ளை எருக்கு (Calotropis gigantea) 1 kg.
வேப்பிலை (Azadirachta indica) 1 kg.
மேலே கூறிய தழைகளையும் பசுவின் கோமியத்தையும் 1 : 1.5 என்ற விகிதத்தில் பத்து நாட்களுக்கு பிளாஸ்டிக்
தொட்டியில் ஊறவைக்க வேண்டும். 11 நாட்கள் கழித்து தழைதனை தனியாகப் பிரித்தெடுத்து விட்டு சாறுதனை
தசகவ்யா தயாரிக்க பயன்படுத்திக் கொள்ளலாம்.
தயாரித்த சாறுகளை பஞ்ணகவ்யாவில் 1:3 என்ற விகிதத்தில் கலந்து 25 நாட்களிக்கு வைத்திருக்க வேண்டும். இதை ஒரு நாளைக்கு ஒரு முறை கிளறிவிடவேண்டும். 25 நாட்களுக்குப் பிறகு 3 சதவீதக் கரைசலைத் தெளிப்பதற்கு
பயன்படுத்தலாம்.
பயன்கள்
1. தசகவ்யா தெளிப்பதால் பஞ்சகவ்யாவின் அனைத்து பயன்களையும் பெறுவதோடு பயிருக்கு பூச்சி மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம் கிடைக்கிறது. இதனால் பூச்சி மற்றும் நோய்களின் தாக்கம் தவிர்க்கப்படுகிறது.
2. பயிர், மரம் மற்றும் மரக் கன்றுகளுக்கு தழை, மணி,சாம்பல், கால்சியம், மற்றும் மக்னீசியம் சத்துக்கள் அதிக
அளவில் கிடைக்கிறது.
3. தசகவ்யா தெளிப்பதால் காய்கறிப் பயிர்கள், மரம் மற்றும் மரக் கன்றுகளுக்கு, பூக்கள் மற்றும் இலைகளின்
எண்ணிக்கை அதிகமாகும்.
4. தசகவ்யா கரைசலை தெளிப்பதால், மாவுப்பூச்சி உள்ளிட்ட எந்தப்பூச்சி, வண்டின் தாக்குதலும் கிடையாது
பீஜாமிர்தம் தயாரிக்க தேவையான பொருட்கள்
தண்ணீர் 20 லிட்டர்,
பசு மாட்டு சாணி 5 கிலோ,
கோமியம் 5 லிட்டர்,
சுத்தமான சுண்ணாம்பு 50 கிராம்,
மண் ஒரு கைப்பிடி அளவு.
தயாரிக்கும் முறை
தண்ணீர் 20 லிட்டர், பசு மாட்டு சாணி 5 கிலோ,கோமியம் 5 லிட்டர்,சுத்தமான சுண்ணாம்பு 50 கிராம்,மண் ஒரு கைப்பிடி அளவு. இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை நன்றாக ஊற விடவேண்டும். இதுதான் பீஜாமிர்தம்
பீஜாமிர்தம் எப்படி பயன்படுத்துவது?
விதை நேர்த்தி செய்ய விதிகளை இந்த கரைசலில் 2 மணி நேரம் ஊற விட வேண்டும். நாற்றுகளாக இருந்தால் அதன் வேர்களை நன்றாக நனையவிட்டு பிறகு நடவு செய்ய வேண்டும்.
பீஜாமிர்தம் நன்மை என்ன?
1.வேர் அழுகல், வேர்க்கரையான், வேர்ப்புழு நோய்கள் தடுக்கப்படும்.
2 எல்லா வகை பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். எந்த கட்டுப்பாடும் இல்லை.
அக்னி அஸ்திரம் தயாரிக்க தேவையான பொருட்கள்
புகையிலை அரை கிலோ,
பச்சை மிளகாய் அரை கிலோ,
வேம்பு இலை 5 கிலோ பசுமாட்டு சிறுநீர் (கோமியம்) 15 லிட்டர் மற்றும் மண்பானை.
தயாரிக்கும் முறை
பசுமாட்டு சிறுநீர் (கோமியம்)15 லிட்டர்,புகையிலை அரை கிலோ, பச்சை மிளகாய் அரை கிலோ, வேம்பு இலை 5 கிலோ இவற்றை மண்பானையில் (வேறு பாத்திரங்கள் பயன்படுத்தக்கூடாது ) போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும் நான்கு முறை மிண்டும் மிண்டும் கொதிக்க வைக்கவேண்டும். இறக்கியபிறகு, பனையின் வாயில் துனியைக் கொண்டு கட்டி 48மணி நேரம் அப்படியே வைத்துவிடவேண்டும் நீரின் மேல் ஒரு ஏடு போல் ஆடை படியும். அதை நீக்கி விட்டால் உள்ளே இருக்கும் தெளிந்த நீர்தான் அக்னி அஸ்திரம். இக்கரைசலை 3 மாதம் வரை பாட்டிலில் சேமித்து வைக்கலாம்.
அக்னி அஸ்திரம் எப்படி பயன்படுத்துவது?
100 லிட்டர் நீரில், 3 லிட்டர் அக்னி அஸ்திரம், 3லிட்டர் கோமியம் கலந்து பயிர்கள் மேல் தெளித்தல் போதும் புழு, புச்சிகள் காணாமல் போய்விடும்.
அக்னி அஸ்திர நன்மைகள் என்ன?
1. பயிர்களில் காய்ப்புழு, தண்டு துளைப்பான் போன்ற புழுக்களைக் கட்டுப்படுத்த அக்னி அஸ்திரம் தெளிக்கலாம்.
2. எல்லா வகை பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். எந்த கட்டுப்பாடும் இல்லை.
பிரம்மாஸ்திரம் தயாரிக்க தேவையான பொருட்கள்
நொச்சி இலை 10 கிலோ
வேப்பம் இலை 3 கிலோ,
புளியம் இலை 2 கிலோ, 1
0 லிட்டர் கோமியம் மற்றும் மண்பானை.
தயாரிக்கும் முறை
நொச்சி இலை 10 கிலோ வேப்பம் இலை 3 கிலோ புளியம் இலை 2 கிலோ.இவற்றை 10 லிட்டர் கோமியத்துடன் கலந்து அக்னி அஸ்திரம் தயாரிப்பது போல் மண்பானையில் தயாரிக்க வேண்டும்.
பிரம்மாஸ்திரம் எப்படி பயன்படுத்துவது?
100 லிட்டர் நீரில் இரண்டரை லிட்டர் பிரம்மாஸ்திரம் 3 லிட்டர் கோமியத்துடன் 1 ஏக்கருக்கு தெளிக்கலாம்.மாதம் 2 அல்லது 3 முறை தெளிக்கலாம்.
பிரம்மாஸ்திரம் நன்மைகள் என்ன?
1.அசுவனி மற்றும் பூஞ்சாண் நோய்களை கட்டுப்படுத்தும்.
2 எல்லா வகை பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். எந்த கட்டுப்பாடும் இல்லை.
மண்பானை செடித்தைலம்  தயாரிக்க தேவையான பொருட்கள்
வேம்பு இலை 50 கிராம்
எருக்கு இலை 50 கிராம்
நொச்சி இலை 50 கிராம்
பொடி செய்த பயறுவகைகள் (ஏதேனும் ஒரு பயறு) 50 கிராம்
தயிர் அல்லது அடர்த்தியான மோர் 1 லிட்டர்
தண்ணீர் 1.5 லிட்டர்
தயாரிக்கும் முறை:​
முதலில் இலைகளை நன்கு அரைத்து கூழாக்கிக் கொள்ளவும். அதை அரைத்து வைத்துள்ள பயிர் பொடியுடன் கலக்கவும். பின் தயிர் மற்றும் தண்ணீருடன் இவ்விழுதை நன்கு கலக்கவும். இதை ஒரு மண் பானையில் வைத்து, அதன் வாயை ஒரு துணியைக் கொண்டு மூடிவிட வேண்டும். பின், ஒவ்வொரு நாளும் இதை இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும் கலக்க வேண்டும். இவ்வாறு 15-20 நாட்களுக்கு பிறகு, இந்த தைலத்தினை பயன்படுத்தலாம்.
ஒரு ஏக்கர் நிலத்திற்கு இந்த தைலத்தினை 20 லிட்டர் தண்ணீரில் கரைத்து, இலைகளின் மீது தெளிக்க வேண்டும்.
அரப்பு மோர் கரைசல் தயாரிக்க தேவையான பொருட்கள்
அரப்பு இலை(அ) உசிலை மர இலை-2 கிலோ.
புளித்த மோர்-5 லிட்டர்.
மண்பானை.
தயாரிக்கும் முறை
நமது ஊர்களில் அதிகமாக கிடைக்கும் அரப்பு இலை அல்லது உசிலை மர இலைகளை 2 கிலோ அளவில் பறித்துக் கொள்ள வேண்டும். பின்னர் நன்றாக நீருடன் சேர்த்து அரைக்க வேண்டும்.
இதிலிருந்து 5 லிட்டர் அளவில் கரைசல் எடுத்து புளித்த மோருடன் சேர்க்க வேண்டும். பின்னர் இந்தக் கரைசல் கலவையை மண்பானையில் ஒருவார காலத்துக்கு புளிக்க விட வேண்டும்.
அரப்பு மோர் கரைசல் எப்படி பயன்படுத்துவது?
ஒரு லிட்டர் அரப்பு மோர் கரைசலுடன் 10 லிட்டர் தண்ணீர் கலந்து விவசாயிகள் பயிர்களுக்கு எளிதாக தெளிக்கலாம். கை தெளிப்பானில் தெளிக்கும் போது ஒரு டேங்க் அளவுக்கு தெளிக்கும் அளவு இது ஒரு ஏக்கர் பயிருக்கு 10 தெளிப்பான் டேங்க் அளவுக்கு தெளிக்க வேண்டியிருக்கும்.
அரப்பு மோர் கரைசல் நன்மைகள் என்ன?
அரப்பு மோர் கரைசல் தெளிப்பதன் வாயிலாக எளிதாக பயிர் பாதுகாப்பு தொடர் நடவடிக்கைகளை விவசாயிகள் மேற்கொள்ள முடியும். அரப்பு மோர் கரைசல் தெளிப்பதால் பூச்சிகள் தூர ஓடிவிடும்.
குறைந்த செலவில் விவசாயிகள் தங்களின் வீடுகளில், வயல்களில், தோட்டங்களில் உள்ள பயிரை எளிதாக பாதுகாக்க முடியும்.
அரப்பு மோர் கரைசலை பூப் பிடிக்கும் பருவத்தில் தெளிப்பதால் பயிர் வளர்ச்சி வேகமாக காணப்படும். நிறையப்பூக்கள் பூக்கும்.
அரப்பு மோர் கரைசலில் ஜிப்ரலிக் அமிலம் என்ற வளர்ச்சி ஊக்கி உள்ளதால் பயிர்கள் குறைந்த காலத்தில் நல்ல வளர்ச்சியை தந்து அதிக விளைச்சல் மற்றும் மகசூல் கிடைக்கும்.
வேம்பு புங்கன் கரைசல் தேவையான பொருட்கள்
வேப்பெண்ணை ஒரு லிட்டர் புங்கன் எண்ணை ஒரு லிட்டர் கோமியம் (பழையது) பத்து லிட்டர் காதி சோப்பு கரைசல் அரை லிட்டர் இவை அனைத்தையும் கலந்து வைத்து ஒருநாள் கழித்து உபயோகிக்கலாம். இது எல்லா வகை பயிர்களுக்கும் மிகச்சிறந்த பூச்சி விரட்டி.
நீம் அஸ்திரா
தேவையான பொருட்கள் 
நாட்டு மாட்டுச்சாணம் 2 கிலோ
நாட்டு மாட்டுச்சிறுநீர் 10 லிட்டர்
வேப்பங்குச்சிகள் மற்றும் வேப்ப இலை 10 கிலோ
தயாரிப்பு முறை:
இவை அனைத்தையும் பெரிய பாத்திரத்தில் போட்டு, 200லிட்டர் நீரையும் ஊற்றி 48 மணி நேரம் ஊற வைக்கவேண்டும். மூடி போட்டு மூடி வைக்க கூடாது. இக்கரைசலை கடிகாரச்சுற்றுக்கு எதிர்திசையில் மூன்று தடவை கலக்கி விடவேண்டும். பின்பு வடிகட்டி வயலில் தெளிக்கலாம். பல வகை கெடுதல் செய்யும் பூச்சிகளுக்கு இது ஒரு நல்ல பூச்சி விரட்டியாகும்.
சுக்கு அஸ்திரா எப்படி தயாரிப்பது?
சுக்குத்தூள் 200 கிராம் எடுத்து, 2 லிட்டர் நீரில் கலந்து பாதியாக சுண்டும் வரை காய்ச்ச வேண்டும். பின்பு குளிர வைக்க வேண்டும். பசு அல்லது எருமைப்பால் 5 லிட்டர் எடுத்து, தாமிரமல்லாத பாத்திரங்களில் கொதிக்க வைக்க வேண்டும். மேலே படிந்திருக்கும் ஆடையை அகற்றி விடவேண்டும். ஆறிய பிறகு இதனுடன் 200 லிட்டர் நீர் மற்றும் சுக்கு கலந்த நீர் ஆகியவற்றை கலந்து வயலில் தெளிக்கலாம். இது மிகச்சிறந்த பூஞ்சாணக் கொல்லியாகும். 21 நாட்கள் வரை சேமித்து வைக்கலாம்.
இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் கரைசல்
பூண்டு ஒரு கிலோ எடுத்து கெரசினில் 12 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின்னர் இதனை எடுத்து நல்ல விழுதாக வருமாறு அரைத்துக் கொள்ள வேண்டும். அரை கிலோ பச்சை மிளகாய் மற்றும் அரை கிலோ இஞ்சி எடுத்து தனித்தனியாக விழுது பதத்தில் அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின் இவ்வாறு தனித்தனியாக அரைத்த விழுதுகளை நன்றாக கலந்து ஒரு காடா துணியில் வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு தயார் செய்த காடா துணியில் வைக்கப்பட்ட கலவையை 6 லிட்டர் தண்ணீரில் முக்கி ரசத்தை வடிக்கவும். இப்போது நமக்கு 6 லிட்டர் கரைசல் தயார்.
இந்த கரைசலை பூச்சி தாக்குதல் குறைவாக இருந்தால் 500 மில்லியும் தாக்குதல் அதிகமாக இருந்தால் 1 லிட்டரும் எடுத்து முறையே 9.5 மற்றும் 9 லிட்டர் தண்ணீரில் கலந்து பூச்சிகள்/செடிகள் மீது தெளித்தால் புழு வகை பூச்சிகள் முற்றிலும் கட்டுப்படுத்தப்படும்.
காதி சோப்பை தண்ணீரில் கரைத்து அடித்தால் அது நாம் அடிக்கும் இயற்கை பூச்சிமருந்து கரைசலை செடியின் மீது ஈர்த்து வைத்துக்கொள்ள உதவும். இதன்மூலம் இக்கரைசலின் வீரியமும் அதிக நேரம் செடியில் இருக்கும். இதை தயார் செய்யும்போது கைக்கு கையுறை தேவை. இல்லையெனில் கை எரிச்சல் அதிகமாக இருக்கும். கவனம் தேவை.

பசு மாட்டுச் சிறுநீரை எத்தனை நாட்கள் வரை சேமிக்கலாம்?
‘‘இந்தத் தகவல், உங்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தலாம். ஆனால், அதுதான் உண்மை. பசுமாட்டுச் சிறுநீரை  100 ஆண்டுகள்கூட சேமித்து வைத்துப் பயன்படுத்தலாம். எந்த அளவுக்கு காலதாமதமாக பயன்படுத்துகிறோமோ… அந்த அளவுக்கு அதன் வீரியம் கூடும். ஆனால், பசுஞ்சாணத்தை எவ்வளவு விரைவாக முடியுமோ… அவ்வளவு விரைவாக பயன்படுத்தி விடவும். அதிகபட்சம் ஏழு நாட்களுக்குள் பயன்படுத்தி விடுங்கள். இதற்கு மேல் சென்றால், சாணத்தில் உள்ள நுண்ணுயிரிகளின் வளர்ச்சி குறையும். பின்பு நாம் எதிர்பார்க்கும் பலன் கிடைக்காது.’’
-ஜீரோபட்ஜெட் பிதாமகர் சுபாஷ் பாலேக்கர்

காலை வெய்யில் பாலுக்கு சமம்




தாய்ப்பால் என்பது வளரும் குட்டிகளுக்கு தன் ரத்தத்தையே உணவாக கொடுப்பது.  கர்ப்பப்பையில் ரத்தம் மூலம் உணவு கொடுத்தது போல, பிறந்தவுடன் ரத்தம் பாலாக மாற்றப்பட்டு இளம் பிஞ்சுகளுக்கு கொடுக்கபடுகிறது.  இயற்கையின் இரகசியம் இது.  என்னதான் முயன்றாலும் இயற்கைப்பாலை தயாரித்து விட முடியாது.  அதனால்தான் உடலுக்கு வேண்டிய சத்து முழுவதும் பாலில் இருப்பது போல, உடல் இயக்க சக்தி முழுவதும் (வைட்டமின் 'டி' உட்பட) காலை வெய்யிலில் இருக்கிறது என்பதை வற்புறுத்திச் சுட்டி காட்டத்தான் இந்த மருத்துவ பழமொழியை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.  பிறந்த பிஞ்சு சிசுக்களுக்கு தாய்ப்பாலின் அவசியம் போல, பிறந்த உயிர்களுக்கு காலை சூரிய ஒளி அவசியம் என்பதை இதனை விடத் தெளிவாகச் சுட்ட முடியாதல்லவா..!!
மருத்துவர் அரியூர் காசிபிச்சை அவர்களின் “நோயற்ற வாழ்வுக்கான இருநூறு நுட்பங்கள்”என்னும் புத்தகத்திலிருந்து தொகுக்க பட்டது

மண் மூச்சு விட்டால்தான் மனிதன் மூச்சு விடமுடியும்


மண் மூச்சு விட்டால்தான் மனிதன் மூச்சு விடமுடியும்

மண் என்பது உயிர் உள்ளது.  அது உயிருடன் இருந்தால்தான், நாம் மட்டும் என்ன, உலக உயிர்கள் அனைத்தும் உயிர் வாழ முடியும்.  ஆக மண் நம் தாய்.  தாய் வளமாக இருந்தால்தான், சேய்கள் செழிப்பாக வாழ முடியும்.  மண்ணை மதித்து, பராமரித்து வாழ்பவர்களுக்கே மண், மாண்பு கொடுக்கும்.  மண்ணை மலடாக்கினால், மக்களிடமும் மலடு பெருகத்தான் செய்யும்.
மண்ணிலே அடங்கி இருக்கிறது கோடிக்கணக்கான சிற்றுயிர்கள்.  ஒரு ஏக்கரில் 4 லட்சம் மண்புழுக்கள் இருக்கும்.  அனைத்து சிற்றுயிர்களும் உணவு, இலை, தழை, மக்கிய உரங்கள், கால்நடைக் கழிவுகளை உணவாகக் கொண்டு, மண் உயிர் வளர்க்கிறது.  கால்நடைகளுக்கு உணவு இலை, தழை, புல், பூண்டுகளே! இவைகளை உண்டு, மண்ணுக்கு வேண்டிய உணவைத் தள்ளுகிறது.  அதனை உண்ட மண், மீண்டும் பயிர் பச்சை விளைவிக்கிறது.  இவைகளை உண்ட கால்நடைகள், பூமிக்கு வேண்டிய உணவு கொடுக்கிறது.  இதுதான் வாழ்க்கை சக்கரம்.  இதில் இடையில் அறுவடை செய்து கொள்பவன் மனிதன்.  ஆக மனிதனுக்கான உணவும், வாழ்வும் வேண்டும் என்றால் மண்ணும், கால்நடைகளையும் கட்டாயம் என்றாகிறது.  கட்டாயங்களில் ஒன்றை இழந்தாலும் மனிதன் உயிர் வாழ முடியாது.  இந்த நிலையில் பலர் மண்ணையும்  வெறுத்து, கால்நடைகளையும் வெறுத்து வாழ்ந்து வருகிறார்கள்.  இவர்கள் மண்ணில் வாழவே உரிமை இல்லை என்றல்லவா ஆகியிருக்க வேண்டும்.  ஏதாகினும் ஒரு விதத்தில் இயற்கைக்கு உதவியாக, உறுதுணையாக இருப்பவர்களுக்கே இவ்வுலகில் வாழ உரிமை உண்டு என்பது போன்ற நிலையை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.  இதுதானே இயற்கையோடு இயைந்த மக்கள் அரசு.  எங்கோ தவறு இருக்கிறது.  சரி செய்து கொள்ள முயல வேண்டாமா?
மருத்துவர் அரியூர் காசிபிச்சை அவர்களின் “நோயற்ற வாழ்வுக்கான இருநூறு நுட்பங்கள்”என்னும் புத்தகத்திலிருந்து தொகுக்க பட்டது

உண்ணா நோன்பே உயரிய மருந்து



உடல்நிலைக்கு எவ்வித சின்னஞ்சிறு உபாதை நேர்ந்தாலும், அந்த ஒருநாள், அல்லது அடுத்துவரும் ஒரு வேளை உணவை தவிர்த்து உண்ணாமை மேற்கொண்டு, குடலுக்கு ஒய்வுக் கொடுத்து விட்டால், உடலில் ஓடும் முழு அளவு ரத்தமும் நோயை விரட்டி அடிக்கப் போராடி வெற்றி பெற்றுவிடும்.  உணவையும் போட்டு அடைத்துக் கொண்டால் பாதி ரத்தம் செரிமானத்திற்கு மாற்றம் செயிதது போக, மீதமுள்ள ரத்த ஓட்டத்தால் உடல் பழுதை நீக்கிக் கொள்ள முடியாது போகும்.  அல்லது இரண்டு மடங்கு நேரம் எடுத்துக் கொள்ளும்.  உணவு கொள்ளாமல் ஒரு மணி நேரத்தில் சரி செய்து கொள்ளுவது எப்படி, உணவு உட்கொண்டு இரண்டு மணி நேரம் சிரமப் படுவது எப்படி? அதற்காகத்தான் வாயை கட்டி நோயை கட்டு என்று சொன்னார்கள்.  நோய் வந்த பிறகு உண்ணாநிலை மேற்கொள்ளுதல் என்பதை விட, வாரம் ஒருமுறை, ஒருநாள், உண்ணாநோன்பு இருந்து, அவ்வப்போது உடலை "சர்விஸ்" செய்து கொள்வது சாலசிறந்தது.  ஆக உண்ணா நோன்பு என்பது உயிர் வாழும் நோன்பு...!!
மருத்துவர் அரியூர் காசிபிச்சை அவர்களின் “நோயற்ற வாழ்வுக்கான இருநூறு நுட்பங்கள்”என்னும் புத்தகத்திலிருந்து தொகுக்க பட்டது

விருந்தாகவே உண்பவர்களுக்கு மருந்து தான் போக்கிடம்


குறிப்பிட்ட உணவு என்று இல்லாமல், நாக்குக்கு லஞ்சம் கொடுக்கும் உணவாகவே தினந்தோறும் விழுங்கி வருபவர்களுக்கு நோய் வரத்தான் செய்யும்.  மருந்து தான் தீர்வு.  இது முதல் கட்டம்.  மருந்து எடுத்துக்கொள்வதை விட விருந்தால் தான் இந்த கேடு நேர்ந்தது என்று தெரிந்த பிறகு, விருந்தை நிறுத்துவது புத்திசாலித்தனம்.  விருந்தும் மருந்தும் 3 நாளைக்கு என்பார்கள்.  மூன்று நான் என்ன, ஆண்டு முழுவதும் விருந்தாகவே விதவிதமாக உண்டு வருபவர்கள், நிரந்தர நோயாளிகள்தான் என்பதை சற்றே கவலையோடு எண்ணிப்பார்க்க வேண்டும்.  நோய் வரும் வரை கொண்டாட்டம்தான்.  வந்த பின் திண்டாட்டம் என்பதை எண்ணிக்கொள்ள வேண்டும்.
அதிலும் அன்றாட வீட்டு சமையல் வேறு விருந்துக்காக சமைக்கும் முறை வேறு விருந்துக்காக சமைக்கும் முறை வேறு. ஆகையால் விருந்துணவை அளவுடன் வைத்து கொள்ள வேண்டும் உணவுக்கவர்ச்சி உடலை ஒழித்து விடும்.
மருத்துவர் அரியூர் காசிபிச்சை அவர்களின் "நோயற்ற வாழ்வுக்கான இருநூறு நுட்பங்கள்" என்னும் புத்தகத்திலிருந்து தொகுக்க பட்டது

 பெயரும் மொழியும்!



இந்தக்காலத்தில் தமிழில் பெயர் வைப்பதே ஒரு சவால்தான். ரொம்ப நாட்டுப்புறம் என்று புறந்தள்ளி விடுவார்கள். பெரும்பாலும் கணவன் பெயரையும், மனைவி பெயரையும் மிக்ஸியில் போட்டு அரைத்து அதனுடன் ஒரு ‘ஸ்’ விகுதியோ ‘க’ விகுதியோ அல்லது இரண்டுமோ சேர்த்தால் பெயர் ரெடி! எனக்குத் தெரிந்த நபர் ஒருவர் தன் குழந்தைக்கு ‘வரஷிகா’ என்று பெயர் வைத்திருந்தார். என்ன அர்த்தம் என்று கேட்டதற்கு தெரியவில்லை! நியூமராலஜியும் மேலே சொன்ன ஃபார்முலாவும் சங்கமித்த பெயர் என்று பெருமிதம் கொண்டார்.
இன்னொரு நண்பர் தன் பையனுக்கு ‘ஃபிராங்க்ளின்’ என்று வைத்திருந்தார். அவர் கிறிஸ்தவர் அல்ல! எனவே நான் ஆச்சர்யப்பட்டு கேட்டேன்.  ‘பெஞ்சமின் ஃப்ராங்க்ளினை உங்களுக்கு ரொம்ப பிடிக்குமோ?’
‘யார் அவர்’
‘பிறகெப்படி இந்தப் பெயரை வைத்தீர்கள்’
‘ஸ்டைலாக இருந்தது..அதனால் வைத்தேன்’
கடவுளே!
மற்றொருவர் தன் மகளின் பெயர் ‘அபி’என்றார். “இதுதான் பெயரா..  இல்லை பெயர்ச் சுருக்கமா”
“பெயரே சுருக்கம்தான்”
“அதுவும் சரிதான். உலகமே வேகமாக ஓடிக்கொண்டிருக்கையில், பெயரை மட்டும் ‘தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன்’ என்று நீட்டி முழக்கியா வைத்துக் கொண்டிருக்க முடியும்”
அந்தப் பெயரைக் கேட்டு மிரண்டவர் சுதாரித்து “அதைக்கூட ஸ்டைலாக சுருக்கி ‘செழி’ என்று வைத்துக்கொள்ளலாம்” என்று யோசனை சொன்னார். “ரொம்ப சிறப்பு ஐயா.. இனிமேல் யாராவது சுருக்கமாக பெயர் வைக்க விரும்பினால் தங்களிடம் அனுப்பி வைக்கிறேன்” என்று விடை பெற்றேன்.

சமீப காலங்களில் நிறைய பேர் தன் குழந்தைக்கு பெயர் தேடும்போது சுத்தமான தமிழ்ப்பெயர் வேண்டாம் சார் என்று வெளிப்படையாகவே சொல்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம். ஆனால் நாடுவதோ, பெயரைச் சொன்னதும் தமிழன் என்ற அடையாளம் தெரிந்து விடாதபடிக்கு ஒரு பொதுப்பெயர்! வியாபாரிகள்தான் தங்கள் பொருட்களின் விற்பனை எல்லைகளை கடந்து விரிய வேண்டும் என்பதற்காக தங்கள் பொருட்களுக்கு பொதுவான பெயர் வைப்பார்கள். இப்போது இந்த குளோபலைஷேஷன் உலகத்தில் குழந்தைகளும் பண்டங்களாகி விட்டார்கள்!

இதற்கு நேர்மாறாக ஒருசிலரோ தன் அதீத தமிழ்ப்பற்றை அல்லது இனப்பற்றை தன் குழந்தைகளுக்கு வைக்கும் பெயரில்தான் காட்டுவார்கள். என் உறவினர் ஒருவர் தன் மகனுக்கு ‘தமிழ்ப் புலி’ என்று பெயர் வைத்திருந்தார். அவனை முதன்முதலாக பார்ப்பவர்கள் கொஞ்சம் மிரட்சியோடுதான் பார்ப்பார்கள், இத்தனைக்கும் அந்தப்பிள்ளை ரொம்ப சாது!

எங்கள் அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்வைச் சொல்கிறேன்!
நேற்று எங்கள் அலுவலக ஆண்டுவிழா. தங்கள் குழந்தைகளுடன் விழாவிற்கு வந்திருந்த ஊழியர்களுக்காகவே ஒரு போட்டி நடத்தப்பட்டது. சில பிரபலங்களின் பெயர்கள் சீட்டில் எழுதப்பட்டு இருக்கும். குழந்தை அதில் ஒரு சீட்டை எடுத்து, தன் பெற்றோரை பார்க்காமல் அதில் குறிப்பிட்டுள்ள பிரபலத்தை அங்கு தொங்கவிடப்பட்டுள்ள கரும்பலகையில் வரைய வரைய, அதைவைத்து அந்தப் பிரபலத்தின் பெயரை பெற்றோர்கள் கண்டுபிடிக்க வேண்டும்.
என் சக நண்பர் தன் எட்டு வயது மகளை அழைத்து வந்திருந்தார்.  அவர்களும் அப்போட்டியில் பங்கு பெற்றனர். சீட்டை எடுத்ததும் திருதிருவென விழித்த அக்குழந்தை போட்டியை நடத்துபவர்களிடம் ஏதோ சொன்னது. உடனே அவர்கள் சீட்டை வாங்கி ஏதோ எழுதினர். என்னவென்று கேட்டதற்கு, அந்தக் குழந்தைக்கு தமிழில் எழுதியிருப்பது புரியாததால் அதையே ஆங்கிலத்திலும் எழுதினோம் என்றனர்.
ஆங்கிலத்தில் எழுதியும் பலனில்லை. சாக்ஃபீஸை கொடுத்து விட்டு தன் அப்பாவிடம் சென்று விட்டது. காரணம் சீட்டில் வந்திருந்த பெயரையே அப்பொழுதுதான் முதன்முதலாக கேள்விப்படுகிறாள் அவள். அப்புறம் எங்கிருந்து வரைவது?!. அப்படியென்ன பெயர் அதில் இருக்கிறது என்று பார்த்தால்....அதிர்ச்சி! அதில் இருந்த பெயர் ‘பாரதியார்’. முதலில் அந்தப்பெண்ணுக்கு தமிழ் எழுத்துகளை படிக்கத் தெரியவில்லை என்று அதிர்ந்தேன். பின்னர் தமிழின் மாபெரும் கவிஞரை தெரியவில்லையே என்று அதிர்ந்தேன். இத்தனைக்கும் என் நண்பர் ஒரு தமிழர். அந்தக் குழந்தையின் பெயரோ ‘யாழினி’!

நான் அதிர்ச்சியுடன் புன்னகைத்தவாறே அவரிடம் கேட்டேன் “என்ன தல! பாரதியாரே தெரியலயா..”
“என்ன ஜி பண்றது! இந்தக் காலத்து பிள்ளைங்களுக்கு பவர்ஸ்டார கூட நல்லா தெரியும் , ஆனா பாரதி - யார்னு கேப்பாங்க” என்று பஞ்ச் டயலாக் விட்டார்.
“யாழினி-னு என்ன அழகா தமிழ்ப்பெயர் வச்சிருக்கீங்க..”
“அது ஒன்னுதான் ஜி நான் செஞ்ச சாதனை! அந்தப் பேரை வைக்கிறதுக்கே எவ்ளோ போராட வேண்டியிருந்துச்சு தெரியுமா! ஒஃய்ப், அப்பா அம்மா, மாமியார்னு ஒவ்வொருத்தர்கிட்டயும் பர்மிஷன் வாங்கறதுக்குள்ள போதும்போதும்னு ஆயிருச்சு! அவங்களப் பொறுத்தவரைக்கும் யாழினிங்கறது கேக்க கொஞ்சம் ஸ்டைலா தெரிஞ்சதால ஒத்துக்கிட்டாங்க. ஆனா என்ன பிரயோசனம்! படிக்கிறது ஆங்கிலோ இண்டியன் ஸ்கூல், தமிழை ஃபர்ஸ்ட் லாங்க்வேஜா கூட எடுத்துக்கல! அப்புறம் எப்படி தமிழ் தெரியும்.! நான்தான் கொஞ்ச கொஞ்சமா சொல்லிக் கொடுக்கணும்” என்று நொந்து கொண்டார்.

யாழினி என்னைப்பார்த்து புன்னகைத்தாள். நான் அவளிடம் “ஹலோ யாழினி! எந்தப் பள்ளியில படிக்கிறீங்க.. என்ன வகுப்பு?” என்றேன். அவள் குழப்பமாக தன் தந்தையின் முகத்தைப் பார்த்தாள். நண்பர் அசடு வழிந்தவாறே.. “ஹி..ஹி... அவங்க அம்மா தெலுங்கு. ஸோ இவளுக்குத் தமிழ் கொஞ்சம்தான் தெரியும். நீங்க இவ்ளோ சுத்தமா(?!) தமிழ்ல கேட்டீங்கன்னா அவளுக்கு புரியாது” என்று சொன்னார்.
நான் குழம்பியவண்ணம் அவரைப் பார்க்க “எங்களுது லவ் மேரேஜ்!” என்று மேலும் அசடு வழிந்தார்.  “ஓ!  ‘தாய்’ மொழி தெலுங்குன்னு சொல்லுங்க. அப்படினா தெலுங்கில கேக்கறேன்.. என எனக்குத் தெரிந்த தெலுங்கில் கேட்டேன் “நூவு ஏ ஸ்கூல்லோ சதுதுன்னாரு? ஏ கிளாஸ்ஸு?”. சட்டென்று புரிந்துகொண்டு புன்னகையுடன் பதில் சொன்னாள் யாழினி “அங்கிள்! ஐ ஆம் ஸ்டடியிங் ஃபோர்த் ஸ்டாண்டர்ட் இன் செயின்ட் பாட்ரிக்ஸ் ஆங்கிலோ இண்டியன் ஹையர் செகன்ட்ரி ஸ்கூல்!

அள்ளி அமுக்கினால் அல்ப ஆயுசு



சாப்பிடுவதில் அவசரமே பட கூடாது. உண்ணும் உணவுக்குத்தக்கப்படி, இரப்பை நீர் ( என்சைம் ) மெல்ல மெல்ல சுரந்து ஜீரணத்தை தொடங்க அவகாசம் தேவை அல்லவா?  ஆழ்துளை கிணறா நீரை பீய்ச்சி அடிக்க? இல்லை , இது ஊற்று உயிர் திசுக்களின் ஊற்று.  உணவை பற்றிய எண்ணத்திலேயே மெல்ல மெல்ல கரைத்து விழுங்க வயிறு சிறுக சிறுக இடம் கொடுத்து விரிவடைந்து உணவை ஏற்றுக்கொள்ளும்.  இரண்டு நிமிடத்தில் நான்கு கவளத்தை அமுக்கி விட்டு ஓடினால் வயிறு திடீர் தாக்குதலினால் அதிர்ச்சி அடைந்து தாங்கி கொள்ள முடியாத மறுப்பு உணர்வு ஏற்படும்.  பிறகு வாந்தி தான்.  செரியாமை, வயிரின் ஒத்துழையாமை இன்னபிற சங்கடங்கள் தான்.  இறுதியில் ஆயுள் குறைவு.
அவசரமாக விழுங்குவது அவசரமான ஆயுள்.  அரைகுறை வாழ்க்கை.  அவசரமாக ஓடுவதற்க்கா பிறந்தோம்?  வயிறு பெருத்தால் வாழ்வு சுருங்கி விடும் எச்சரிக்கை.
மருத்துவர் அரியூர் காசிபிச்சை அவர்களின் "நோயற்ற வாழ்வுக்கான இருநூறு நுட்பங்கள்" என்னும் புத்தகத்திலிருந்து தொகுக்க பட்டது

கேழ்வரகு மோர்க்கூழ்



தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு       - ஒரு கைப்பிடி
புளித்த மோர்            - தேவையான அளவு
கடுகு                            - அரை தேக்கரண்டி
சீரகம்                           - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை        - சிறிது
உப்பு, நல்லெண்ணெய்  - தேவையான அளவு.
செய்முறை:
கேழ்வரகு மாவை தண்ணீர் சேர்த்து நீர்க்க கரைத்துக் கொள்ளவும்,அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, தண்ணீர் கொதித்ததும் மாவுக் கரைசலையும் ஊற்றி நன்கு கலக்கவும்.மாவு வெந்து கூழ் பதத்திற்கு கெட்டியாக வந்த உடன் இறக்கவும்.
இதில் ஆரிய உடன் மோர், உப்பு சேர்த்து கரைத்துக் கொண்டால் மோர் கூழ் தயார்
மேலும் சுவை சேர்க்க நல்லெண்ணெயில் கடுகு சீரகம் கறிவேப்பிலை தாளித்து மோர் கூழ் உடன் சேர்த்து கொள்ளலாம்.

மரம் தான் உலகின் உரம்



திருமண ஏற்பாடு, நகைகள்,சேலைகள், ஆடைகள் வாங்கினாலும், வங்காவிட்டாலும், வசதிக்கு, சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக் கொண்டாலும், ஒரு சில அடிப்படை சடங்குகள் மட்டும் மாற்றப் படாமலேயே இருந்து வருகிறது.
திருமணத்திற்கு முன் 3-ம் நாள், அல்லது 5-ம் நாளில் முகூர்த்தக்கால் ஊன்றி, பந்தல் போட்டு, திருமண வேலை தொடங்கப்படும். பங்காளிகள் மாமன் மைத்துனர்,மிக நெருங்கிய உறவினர்கள், நெருக்கமான நண்பர்கள் முன்னிலையில் முகூர்த்தக்கால் ஊன்றப்படும் . முகூர்த்தக்கால் குழியில் பால் ஊற்றி கால் ஊன்றுவார்கள். பால் ஒரு மண்ணுயிர் பெருக்கி, ஊன்றப்படும் மரப்போத்து உயிர் பெற நல்லதொரு ஊட்டம்.
இது உயிர் பிடித்து மரமாக வளர்த்த காலம் ஒன்றுண்டு. பின்நாளில் நவதானியம்,பாலுடன் விட்டு, முளைக்க முடியாத, பந்தல் காலாகப் பயன்படும் காய்ந்த மரத்தை நட்டு பந்தல் அமைத்துக் கொண்டு விட்டார்கள். திருமணம் முடிந்து பந்தல் பிரிக்கும் போது இந்த முகூர்த்தக்காலும் பிடுங்கப்பட்டு விடும். இது ஒரு சரிவு நிலை.
நல்லாவூர் கிழார் பாடிய அகநானூறு 86-ம் பாடலின் செய்திப்படி, முகூர்த்தக்கால் ஊன்றப்பட்டு, மணல் நிரப்பி, பந்தலிட்டு மணமேடை தயாரித்தனர். இப்போதைய வீடு, வாசல், தெரு, மாடி, கட்டிடம் என்பதை சற்று மறந்து, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், நம் சிந்தனையை செலுத்த வேண்டும். நிலமும், நிலம் சார்ந்த வீடும் அமையப் பெற்றிருந்த காலம்.
குடியிருப்பு வீடு, இயற்கை வளம் சார்ந்ததாக, மரம் செடி கொடிகளுக்கு இடையே அமைக்கப் பட்டிருந்த காலம். இப்போது போல, எங்கோ விளையப் பெற்ற காய்கறிகள், எங்கோ விற்பனை செய்யப்படும் வாணிபக் காலமல்ல அந்தக்காலம். அவரவர் வீட்டில், அவரவர் ஊரில், அவரவர் பகுதி மண்ணில் உற்பத்தி செய்து கொண்ட காய்கறிகள் வைத்து, மன நிறைவோடு வாழ்ந்து வந்த காலம் அந்த காலம்.
“உணவெனப்படுவது நிலத்தொடு நீரே” என்பது சங்க காலம் காட்டும் தமிழர்களின் வாழ்வியல் நெறி.
மண் எப்படிப்பட்டதோ, அதற்கேற்றாற்போல, நீர்வளம்; இவ்விரண்டும் எப்படிப்பட்டதோ, அதற்குகேற்றபடியான விளைபொருள் உற்பத்தி. அதற்குகேற்றபடியான உடல் அமைப்பு, உடல் நிறம், வாழ்கை முறை எல்லாம்.
எது எப்படியிருப்பினும், தமிழர் திருமணங்களில் முகூர்த்தக் கால் ஊன்றி, திருமணத்தைத் தொடங்குவது நம் மரபு. திருமணத்திற்கு முன்னதாக ஊன்றப்படும் முகூர்த்தக்கால் வீட்டிற்கானது. இது செழித்து வளர்ந்து மரமாகி நிழல் தந்து, உயிர் வளி பரப்பி, வீட்டை வீட்டாரை காப்பாற்றுவது.
காலூன்றிய அன்றே நவதானியம் எடுத்து முளை கட்டி வைத்து, திருமணத்தன்று முளைப்பாறி வைத்து, மண் வணக்கம், மலர் வணக்கம், விதை நெல் வணக்கம் முடித்து திருமணம் நடைபெறும்.
அதே போல திருமணத்தன்று மணமேடையில் ஒரு முகூர்த்தக்கால் வைத்து, பூ பொட்டு மரியாதை எல்லாம் செய்து, மணவிழா முடிந்தபின், இம்முகூர்த்தக் காலை மணமகன் எடுத்துவர, மணமகள் மேடையில் பயன்படுத்தப்பட்ட பூசனை நீரை, புதுப்பானையில் எடுத்து வர, ஆற்றங்கரை, ஏரிக்கரை, போன்ற பொது இடத்தில், மணமகன் குழிபறித்து நட, மணமகள் கொண்டு வந்த மங்கல நீர் ஊற்றி, மரம் நட்டு வருதல் இன்றும் நாம் கடைபிடித்து வரும் பண்பாடு. முளைப்பாறி கட்டிய நவதானிய தளிர்களை, நீர்நிலைகளில் விட்டு வருவார்கள். எங்கோ சென்று வேர் பிடித்து வளர்ந்து பசுமை காட்டும் என்கிற எதிர்பார்ப்பு நல்லது.
பல இடங்களில், வெறும் சம்பிரதாய சடங்கு. வைக்கப்படும் போத்து கூட உதயம் போத்தாக இருந்தது, இருக்கிறது. ஆனால் பல இடங்களில், மூளைக்க முடியாத மூங்கில் கழியை வண்ணம் பூசி, அழகு படுத்தி, மணவிழா மேடையில் ஊன்றி வைக்கப்படும் வெறும் சடங்கு. சிலர் வேம்பும் அரசும் சேர்த்து பால் ஊற்றி நட்டு முகூர்த்தக்கால் ஊன்றுவதும் உண்டு.
திருமண மண்டபத்தில் நிரந்தரமாக ஒரு மூங்கில் கழி இருக்கும்.இதுவே அங்கு நடக்கும் அத்தனை திருமணங்களுக்கும் நடப்படும் முகூர்த்தக்கால், கேலிக்கூத்து போல தோன்றுகிறதல்லவா?!
திருமணத்தன்று நடப்படும் முகூர்த்தக்கால் நாட்டிற்கானது. ஆகவேதான் பொது இடத்தில் நட்டார்கள். என்றோ பிறக்கப்போகும் குழந்தைக்கான மூச்சுக்காற்றை உற்பத்திசெய்து கொடுக்க, திருமணத்தன்றே முகூர்த்தக்கால் ஊன்றும் செயல்பாடு. இதுவன்றோ சமுதாயப்பணி; பல்லுயிர் ஓம்பும் பண்பாடு வளர்ப்பு எதுதானே. எத்தனை தொலை நோக்குப் பார்வை! எத்தனை பெரிய சமுதாய அக்கறை! வாழ்வியல் பண்பாடு எத்தனை உயர்ந்தது! மலைப்பாக இருக்கிறது.
பூமித்தாயின் ஆடைதான் பசுமையான மரம், செடி, கொடி என்று நம்மவர்கள் எப்படி கற்றார்கள்! பூமித்தாயின் நுரையீரல்தான் மரங்கள் என்கிற நுட்பத்தை அறிந்து தமிழ் இனத்தின் பண்பாடாக மரம் வளர்த்தலை எப்படி கடைபிடித்தார்கள்! இதில் என்னொரு சிறப்பும் உண்டு.
உதயம் மரம் அதன் பட்டையிலிருந்து இறக்கப்படும் கசாயம் மருத்துவ குணம் கொண்டது. கர்ப்பப்பை கோளாறுகளை அகற்றக்கூடியது. உதயம் பட்டை கசாயம் உட்கொண்டு வந்தால் கர்ப்பப்பை கட்டி, பெரும் போக்கு, மலட்டுத்தன்மை போன்ற எந்தவித கர்ப்பப்பை நோயும் அண்டாமல் திடகாத்திர உடலோடு மகப்பேறு செல்வம் பெற்று வாழ்வாங்கு வாழ்வார்கள்.
அதாவது மனிதர்களை உற்பத்தி செய்து கொடுக்கும் விலை நிலம் தாய். அந்த தாய் செழிப்பாக இருந்தல்தானே, செழிப்பான குழந்தைகளை உற்பத்தி செய்து தர முடியும். ஆகவே தாய்மையை, தாய்குலத்தை, மனிதகுல விளைநிலத்தை பாதுகாக்கத்தான் உதயமர முகூர்த்தக்கால் ஊன்றும் பண்பாடு.
ஒருவர் இருவர் என்று இல்லாமல், நாடு முழுதும் நீக்கமற நிலவும் பண்பாடாக, திருமணத்தன்று முகூர்த்தக்கால் ஊன்றி, மரம் வளர்ப்பதை,எத்தனை நுண்ணறிவோடு, ஒட்டுமொத்த சமுதாயமும் கடைபிடிக்க செய்திருக்கிறார்கள்! திருமணம் நடக்காத வாழ்க்கை இல்லை; வீடு இல்லை, ஆகவே எல்லோர் வீட்டிலும் முகூர்த்தக்கால் ஊன்றினார்கள். மரம் நட்டு வளர்த்தார்கள். ஆக, மரம் நடுதல் என்பது கட்டயப்படுதப் படாமலேயே, கட்டாயமாக செய்ய வைத்துள்ள நம் நாகரிகத்தை எத்தனை புகழ்ந்தாலும் தகும் அல்லவா!
இன்றைக்கு மரம் நடச்சொல்லி எந்தெந்த வழியிலோ அறிவுரை கூறுகிறோம், வேண்டுதல் விடுக்கிறோம். வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்! மரம் மழை தரும் வரம்!- என்பன போன்று போக்குவரத்து வண்டிகளிலெல்லாம் விளம்பரம் செய்கிறோம். மரம் வளர்க்கச் சொல்வதற்காகவே தனியொரு வன இலாகா; இலவசமாக மரக்கன்றுகள் வினியோகம்; பள்ளிதோரும் பசுமைத்தாயகம் அறிவிப்பு, பள்ளி, கல்லூரிகளின் நாட்டு நலத்திட்டத்தின் மூலம் ஏகப்பட்ட மரக்கன்று நடல். ஆனாலும் இத்தனைக்குப் பிறகும் பொதுமக்கள், மரம் நடுதலின் அவசியத்தை உணர்ந்ததாகத் தெரியவில்லை.
மரம் வைக்கும் வேகத்தைவிட, மரம் வெட்டும் வேகம் அதிகமாகத்தான் இருக்கிறது.
“ஒசோன் மண்டல ஓட்டையைத் தைக்க புதிதாய் ஊசி கண்டுபிடி” என்று பாடினான் இலங்கவிஞன் தாராபாரதி. எப்படி தைப்பது? எதனால் தைப்பது? அதற்கு அவனே வழியும் சொன்னான் “பட்டமரம் ஒன்று வெட்டும்பொழுது பக்கத்தில் புதிதாய் நட்டுவிடு” அவ்வளவுதான்.
தமிழ்நாட்டில் ஒரு பழமொழி உண்டு “பட்டமரமானாலும் வச்சி வெட்டனும்”. மரம் பட்டுப்போய் விட்டாலும் கூட, அவசரப்படாமல் நூறுமுறை சிந்தித்து, பதிலியாக, கன்று நட்டு, வளர்த்து நன்றாக வேர் பிடித்த பிறகு பட்ட மரத்தை வெட்ட வேண்டும் என்பது பொருள்.
உலக உயிர்களுக்கான உணவு சமைக்கும் கேந்திரமே மரம்தான்.
சூரிய சக்தியை கிரகித்து, நாம் விடும் கரியமில வாயுவை கிரகித்துக் கொண்டு, நிலத்திலிருந்து(கிடைக்காத பொது காற்றிலிருந்து) நீரை எடுத்துக்கொண்டு, மனிதனுக்கு வேண்டிய உயிர்வளி(ஆக்சிஜன்) கொடுப்பதாக இன்று கண்டுபிடித்த அறிவியல் கூற்றை, அன்றே எப்படி கற்றுணர்ந்து கடைப்பிடித்தான் தமிழன்?
இது தான் ஒளிச்சேர்க்கை, இதற்கு சூரிய ஒளி கட்டாயம் அவசியம். இல்லையேல், உற்பத்தி என்பதே இல்லை என்பதை,” சூரியனைப் பகைத்தால் சோம்பிவிடும் வாழ்க்கை” என்பதை எத்தனை ஆழமாகக் கூறியிருக்கிறான்!
வள்ளுவர் தமது முதல் திருக்குறளில், ஆதித்தியன், ஆதி பகவன் என சூரியனைத்தான் உலக உயிர்களின் ஜீவநாடி என்று வணக்கம் செலுத்தியுள்ளதை ஆழ்ந்து சிந்தித்தறிய வேண்டும்.
ஆக முன்னைய தமிழர்கள் தங்களின் கட்டுப்பாடான பண்பாட்டில், சமுதாயத்திற்கான நல்லதை சிந்தித்து கடைபிடித்து ஒட்டுமொத்த சமுதாயமே பங்கெடுத்துப் பயன்கொள்ளும் முறையில் வடிவமைத்துச் சென்றுள்ளார்கள் என்பது நமக்கெல்லாம் பூரிப்பு தரக்கூடிய அறிவியல் செய்திதானே!
சூரியன் கூட பகைவனா? குழந்தைகளை சூரிய ஒளி படாமல் எப்படியெல்லாம் வதைக்கிறோம்! இதுதான் அறிவியல் கற்றுக் கொடுக்கும் நாகரிக வாழ்க்கையா? சிந்திக்க வேண்டாவா?
மரம் வளர்ப்போம்! மண்ணுயிர் காப்போம்! மரம்தான் உலகிற்கான உரம்.
மருத்துவர் அரியூர் காசிபிச்சை அவர்களின் “நோயற்ற வாழ்வுக்கான இருநூறு நுட்பங்கள்”என்னும் புத்தகத்திலிருந்து தொகுக்க பட்டது

வீட்டுக்கொரு நாட்டு மாடு



புதுமனைப் புகுவிழா(கிரகப் பிரவேசம்). லட்சக்கணக்கில் முதலீடு செய்து கட்டப்பட்ட வீட்டிற்குள் குடியேறும் விழா. சுற்றமும் நட்பும் சூழ, நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து குடியேறுதல் நிகழ்ச்சி, நாடு முழுதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
புதுமனைப் பொழிவுடன் விளங்கும் விட்டிற்குள், மந்திர ஆலாபனையோடு குடியேறும்போது, பசுவுடன் குடி புகுதல் என்பதை மங்களகரமாகக் கருதுக்கிறோம்.
குளித்து முழுகி தலையிலே புத்தாடை கட்டி, மாலையும் கழுத்துமாக, பூவும்பொட்டுமாக, பசு தான் பெற்ற கிடெரிக் கன்றுடன் வீட்டாரோடு புதுமனைப் புகுந்து வெளியேறுவதைக் கண்டிருக்கிறோம். சொந்த மாடு இல்லாதவர்கள் வாடகைக்கு மாடு கொண்டு வந்து, நடிக்கச் செய்து, வாடகைப் பணமும் கொடுத்து அனுப்பி விடுவதைப் பார்க்கிறோம். அதாவது புதுமனைப் புகுவிழாவில் பசுவுடன் நுழைவது தேவைப்பட்ட ஒன்று என்று எண்ணுகிறோமே ஒழிய, பெரும்பலானவர்களுக்குப் பொருள் புரியாதச் சம்பிரதாயச் சடங்கு! அவ்வளவுதான். அடுக்கு மாடிகளில் வீடு வாங்கி குடியேறும் போது மாட்டைக் கொண்டுபோக முடியாமல், பசுவும் கன்றும் பொம்மையாக எடுத்துச் சென்று பசு நுழைவதாக சடங்கு. இதற்குப் பெயர் பேக்கேஜ் என்பதாம். கோமாளித்தனமாக இருக்கிறது.
பசு என்பது வணக்கத்திற்குரிய கோமாதா, செல்வத்திற்கெல்லாம் பெருஞ்செல்வம், லட்சமி வளம் நிறைந்தது. ஆகவே முதல் நுழைவு பசுஞ்செல்வத்துடன் தான் என்பது வளமான வாழ்க்கைக்கு வழி வகுக்கும் என்பது பலரின் நம்பிக்கை, நல்லது.
தொழுது வணங்க வேண்டியவைகள் மாடுகள். அதனால்தான் அவைகள் தொழுவத்து மாடுகள். தொழுது வணங்கப் படவேண்டிய மாடுகள் கட்டப்படும் இடம் தொழுவம் ஆனது.
தொழுது போற்ற வேண்டிய அளவிற்கு பசுவிடம் என்ன இருக்கிறது? மாடுவளர்ப்பை மாபெரும் கடமையாக எண்ணினார்களே எப்படி? மழலைச் செல்வம் இல்லாது போனால் கூட மாடு வளர்க்கத் தவறவில்லையே எப்படி?
உலக உயிர்களைப் போல அதுவும் ஒரு ஜிவன்; தீவனம் எடுக்கிறது; பால் கொடுகிறது; அவ்வளவுதானே! என்று நினைப்பாரும் உண்டு.
இதன் அடிப்படையில்தான், மாடு வளர்ப்பு என்பது ஒரு அசிங்கப்பட்ட, தரமற்ற கேவலப்பட்ட, படிப்பறிவு அற்ற பாமரர்கள் செய்யும் தொழிலாகக் கருதப்பட்டு விட்டது.
கவனம் செலுத்த ஆள் இன்றி, மேய்ச்சல கிடைக்க வாய்ப்பின்றி, கால்நடைகள் பசியால் பரிதவிப்பதை, பார்க்க சகிக்காமல் வந்த விலைக்கு விற்று விட்டு, வேறு தொழல் நோக்கி நகரத் தொடங்கி விட்டார்கள் கிராமத்தார்கள்.அதனால், கால்நடைகளின் எண்ணிக்கை, கடந்த பத்து ஆண்டுகளில் மளமளவெனச் சரிந்து, உலகின் முதல் இடத்தில் இருந்த நிலை இழந்து, பால்பொடி இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு இந்தியா வந்துவிட்டது.
மனிதன் வளமாக வாழவேண்டும் என்றால் வளமான உணவு கொள்ள வேண்டும். வளமான உணவு, வளமான நிலத்திலிருந்துதான் கிடைக்க முடியும். வளமான நிலம் வேண்டுமென்றால், நிலத்திற்கு வளமான உணவு இட வேண்டும். வளமான உணவு என்பது தேவைப்பட்ட அளவு கால்நடைக் கழிவுகளே. பட்டினி கிடக்கும் நிலத்தில் சரியான, நிறைவான உற்பத்தி கொடுக்க முடியாது, உயிருள்ள நிலம் என்பது கோடிக்கணக்கான சிற்றுயிர்களை தன்னிடம் கொண்டது. சாணத்தில் உள்ள கோடிக்கணக்கான நுண்ணுயிர்கள்தான் நிலத்திற்கான வளமை கூட்டும் சிற்றுயிர்கள்.
ஆகவே, மனிதன் வளமாக வாழ வேண்டுமானால், வளமான கால்நடை வளர்த்தாக வேண்டும்.
அப்படியானால், மனித வளம் என்பது கால்நடை வளத்தில் அடங்கியிருகிறது. இதனைப் புரிந்துதான் மாட்டோடு வாழப் புகுந்தான் முன்னைய தமிழன். பசுமாட்டின் நுழைவு அதற்காகத்தான்.
கால்நடை வளர்ப்பு என்பது, ஒட்டுமொத்த சமுதாயத்தையும் காக்க ஏற்படுத்தப்பட்ட சமூகத்திற்கான தொழில்.
உலகைக்காக்கும் சக்தி என்பது நிலத்தினுள் உறங்கிக் கொண்டிருக்கிறது. உறங்கிக் கொண்டிருக்கும் சக்தி, தாவரங்கள் மூலம் எழுப்பிவிடப்பட்டு நிலத்திற்கு வெளியே கொண்டு வரப்படுகிறது. விழித்தெழுந்த சக்தி, கால்நடைகளின் வழியே நடமாடுகிறது.(Energy sleeps in earth; Energy wakes in plants; Energy walks in animals)
ஆக, இது ஒரு சுழற்சி. சுழற்சிக்கான சங்கலி நிலம்; நிலத்திலிருந்து மரம், செடி கொடிகள், அதனை உண்ட மனிதன், ஆடு மாடுகள்; ஆடு மாடுகளின் கழிவுகள் இலை தழைகளுடன் சேர்ந்து மீண்டும் நிலத்திற்கான உணவு. இந்த சுழற்சி சங்கிலியில் கால்நடை ஒரு கரணை.
ஒரு கரணை அறுந்துவிட்டால், எத்தனை பெரிய பலம் பொருந்திய சங்கிலியாக இருந்தாலும் பயன் இல்லையல்லவா! ஆக, சங்கிலியின் உறுதி என்பது உறுதியற்ற கரணையில் இருக்கிறது.
இந்த அடிப்படையில்தான் பசு வளர்த்தார்கள் நம் முன்னோர்கள். எல்லா உண்மைகளையும் மறந்து விட்டோம்.
அதிலும், பசுக்களை உயிர் சங்கிலியில் ஒரு அங்கமாகப் பார்த்தார்களேயன்றி, பால் கொடுக்கும் எந்திரமாகப் பார்க்கவில்லை.
நிலமும் உயிர் வாழ வேண்டும்; அதற்காகச் சாப்பிட வேண்டும். மாடும் உயிர் வாழ வேண்டும்; சாப்பிட வேண்டும். மனிதனும் உயிர் வாழ வேண்டும், சாப்பிட வேண்டும். மூன்றிற்கும் ஒத்த மதிப்பு. மனிதனும் கால்நடையும் ஒன்றுதான்; நிலமும் ஒன்றுதான், ஒன்று உயர்ந்தது, மற்றொன்று தாழ்ந்தது என்பது உயிரியலில் இல்லவே இல்லை.
பாலுக்குப் பயன்படாத மாடு கவனிக்கப் படாமலேயே மடிய விடுவது, கிடைத்த அளவிற்கு போதும் என்று அடிமாட்டிற்கு விற்றுத் தொலைப்பது என்னவித பண்பாடு? எப்படி உயிர்ம நேயம்?
பயன் கொடுக்காத பசு பட்டினி கிடக்க வேண்டியது தானா?
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தன்நோய் போல் போற்றக்கடை(குறள்-)

பிற உயிர்க்கு நேரும் துன்பத்தை, தமக்கு வந்த நோயாகக் கருதி, அதனை காக்கவில்லை என்றால் தாம் பெற்றுள்ள அறிவினால் யாது பயன்?
“பசு மாட்டுப்பாவம் பரலோகம் போனாலும் விடாது” என்கிற பழமொழி நம்நாட்டில் தான் இருக்கிறது. புரிய வைக்க முயற்சி செய்வோம், கற்றுக் கொடுப்போம்! இதுவே எதிர்காலத்தைக் காக்கும் கவசம்.
 மருத்துவர் அரியூர் காசிபிச்சை அவர்களின் “மறைந்து வரும் மாண்புகள்”என்னும் புத்தகத்திலிருந்து தொகுக்க பட்டது

வித்து இல்லாதவன் சொத்தை



விதை பாதுகாப்பு என்பது தமிழர்களின் கை வந்த கலை “விதை இல்லா வீடு வதை படும் வீடு” என்பது தமிழ்நாடுப் பழமொழி “வீணாய்ப் போனவன் தான் விதை நெல்லை விற்றுத் தின்பான்”என்பது இன்னுமொரு தமிழ்ப் பழமொழி. அவரவர் வீட்டில், அவரவர்க்கான விதை பாதுகாக்கப்பட்டு வந்தது நம் மரபு. என்றைக்கு விதைகளை அரசாங்கக் கிடங்குகளில் விற்பனைச் சரக்காக அரசாங்கம் கொண்டு வந்ததோ , அன்றே விவசாயிகளை, தற்சார்பிலிருந்து பிறழ வைத்து, சோம்பேறியாக வாழ வைத்து,விளை பொருளின் தரத்தை குறைத்திட, அரசாங்கம் துணை போய்விட்டது என்று பொருள். தரமான விதை இருந்தால் தான் தரமான விளை பொருள் கிடைக்கும். விவசாயிகள் வைத்திருந்த விதை நெல் பாதுகாப்பை, அரசாங்கம் எடுத்துக் கொண்டால், அரசாங்க இல்லகாக்கள் போல எல்லாமே ஏனோ தானோ தான்; தரக்குறைவான விதைதான்; தரக்குறைவான விளைபொருள்தான், எல்லாமே ஒரு நச்சுச்சுழல்.
விதை எடுப்பதிலும், விதை பாதுகாப்பதிலும், விதை நேர்த்தி செய்வதும் உழவர்களின் மரபு வழிவந்த தனித்தன்மையாகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக குடும்ப் பாரம்பரியமாக, மடை மாற்றம் செய்து பாதுகாக்கப்பட்ட தொழில் நுட்பம், அண்மைக்காலம் வரை நீக்கமற நிறைத்திருந்த பண்ப்பாடு. இன்று மறைந்தே போய்விட்டது.
விதை நெல் எடுக்கும் முறையைப் பாருங்கள்.
விளை நிலத்திலேயே, எந்த மூலையில்(பகுதியில்) விளைச்சல் தரமானதாக, கலப்புக்கதிர் இல்லாமல், ஒரே சீராக விளைந்து, முற்றி, சமஅளவு கதிர்களாகப் புலப்படுகிறதோ, அந்தப் பகுதியை விதை நெல் எடுக்க ஒதுக்கி வைப்பார்கள். அந்தப் பகுதியை தனியே அறுத்து, களத்து மேட்டில் தனியாகக் கட்டி அடுக்கி, தனியாக அடிப்பார்கள். அதிலும் அரி எடுத்து ஒரே அடியில் விழக்கூடிய நெல் மணிகள் மட்டும் விதைக்காக சேகரித்துக் கொள்ளப்படும்.அடுத்த அடியில் நெல் உதிரச்செய்ய அடுத்தவர்களிடம் கொடுத்து சற்று தள்ளி அடிக்க விடுவார்கள். கதிரின் நுனி பதரும் அல்லது முற்றாத நெல்லும் விதைக்குக் கூடாது. அடிப்பகுதி முற்றிய நெல்மணியை விட நடுக்கதிரில் உள்ள நெல்மணியே பெரிதானதாக, விதைக்கத் தேரிந்தெடுக்கப்படும் என்பது நம் விவசாயிகள் கடைபிடித்து வந்த உயர்ந்த வழி.
அப்படி எடுத்த விதை நெல்லை உலர வைத்து, கோட்டையாகக் கட்டி பாதுகாத்தார்கள். கோட்டை என்பது நெல்லின் தாளினாலேயே முட்டை போன்று உருண்டை வடிவத்தில் கட்டி வைத்துக்கொள்வது; வைக்கோல் தாளினாலேயே கட்டப்பட்ட விதை நெல் முட்டை தான் கோட்டை. விதைகள் மூச்சிவிட காற்றுபோக்கும் உண்டு. கோட்டையின் மீது சாணிப்பால் தடவி விடுவதால் அந்துப்பபூச்சி போன்று எதுவும் உள்ளே நுழைய முடியாது. அப்படிப்பட்ட செலவில்லாத, அறிவியல் பூர்வமான, கலை நுட்பம் பொருந்திய விதை பாதுகாப்பு முறை நம் பாரம்பரியமானது.
தேவைப்படும் பொழுது கோட்டையாகவே நீரில் அமிழ்த்தி, ஊற வைத்து மறுநாள் எடுத்து முளைக்கட்டிய நிலையில் விதைத்து விடுவார்கள். ஊறவைத்த விதைகளைப் பார்க்கும்போதே விதையின் தரம் தெரிந்து விடும். எல்லா விதைகளும் பழுதில்லாமல் முளை விட்டிருக்கும்.
இப்போது கோட்டை கட்டத் தெரிந்தவரும் யாரும் இல்லை, கோட்டை என்றால் என்னவென்று தெரிந்த விவசாயிகள் இருக்கிறார்களா என்பதும் ஐயமே! விதை பாதுகாப்புக்கு அத்தனை முக்கியத்துவம்.
நாடே பஞ்சம் வந்து தத்தளித்தாலும்,வெள்ளத்தில் முழ்கி விடையெல்லாம் அழிந்துபட்டாலும், விதை எடுத்து வாழ்வியலை மீட்டேடுக்கத்தானே,கோவில் கலசத்தில் வரகு விதை வைத்து பாதுகாக்கும் நுட்பம் இருந்திருக்கிறது!
பிறந்த வீட்டிலிருந்து புதுமணப்பெண் மணமகன் வீட்டில் முதன் முதல் நுழையும்போது, மரக்காலில் அல்லது படியில் விதை நெல் எடுத்து, தோழிகள் புடை சூழ நுழைவது இன்றும் சம்பிரதாயமாக, சடங்காக, நாட்டுப்புறத் திருமணங்களில் காண முடிகிறது தானே! புதுமணப்பெண் புதிய இடத்தில் விதைக்கப்படுகிறாள். விதை எடுத்துச் சென்று பிறந்த வீட்டுப் பாரம்பரியத்தை, புகுந்த வீட்டில் நிலை நாட்டுகிறாள்; இரண்டு வித நெல் ரகங்கள் இப்போது இருப்புக்கு வந்து விடுகிறது.
திருமண நிகழ்ச்சியில், படி நிறைய விதை நெல் வைத்து நல்ல விளக்கு ஏற்றித்தானே சுற்றி வந்து வழிபாடு நடத்தி, மணம் முடிக்கப் படுகிறது; வீட்டில் பெரியவர்கள் உயிர் விடும் தலை மாட்டருகே சாணத்தில் விதை நெல் பதித்து சுவரில் தட்டி வைத்து, அந்நெல்லைப் பயன்படுத்தி முளை கட்டி ம் சடங்கின் போது, முளை கட்டிய வித்துக்களை நீர் நிலையில் விட்டார்கள். அது எங்கோ சென்று வேர் பிடித்து, செடியாக, பயிராக, மாட்டிற்கு, நாட்டிற்கு, மனிதனுக்கு ஒட்டுமொத்த உயிர்ம வாழ்க்கைக்கு பயன்படும் மரபு வழி பண்பாட்டைக் காத்த பரம்பரை தானே நம்முடையது!
இறப்புநிகழ்ச்சியின் போது, இறந்துப்பட்ட உடலைச்சுற்றி விதை நெல்லை படியில் ஏந்தி சுற்றி வந்து வீட்டிற்குள் எடுத்துச் சென்று, விதை நெல் பாதுகாப்புப் பணியில் வைப்பது, இன்றும் எல்லோர் வீட்டிலும் நாடு முழுவதும் நடப்பதை பார்க்கிறோம் அல்லவா! இந்நிகழ்ச்சிக்குப் பெயர் “சீதேவி” வாங்குதல் என்பது. இறந்தவர் பயன்படுத்தி பாதுகாத்த விதையினை, அவர் மறந்தாலும், அவரின் சந்ததியினர் பயன்படுத்தி வாழ வேண்டும் என்கிற மங்களகரமான நம்பிக்கைக்குதான் சீதேவி வாங்குதல் என்பது. பிணம் வெளியே போக, அவரின் விதை வீட்டிற்குள் வருகிறது. விதை பாதுகாப்பில் தமிழர்களுக்கு எத்தனை அக்கரை.
ஈன, எதற்காக இதன் உள்நோக்கம் என்னவெனப் புரிகிறதோ இல்லையோ, அத்திகரானாலும், நாத்திகரானாலும் இந்தச் சடங்கு எல்லோர் வீட்டிலும் நடக்கிறதுதான். இந்த நம்பிக்கையை மட்டும் மூட நம்பிக்கை என்று யாரும் விடவில்லை. விதை பாதுகாப்பு என்பது நம் பண்பாடு. ஆயிரம் காலத்துப் பயிர் காக்கும் பாரம்பரிய வழிமுறை; நம் நாகரிகம்; வாழ்வியல் கலை.வாழை அடி வாழையாய் மனித இனம் தழைத்துச் செழித்து வளர வேண்டும் என்கிற மனித நேயம்; உயிர்ம்ம நேயம்; உலகுக்கான வாழ்வியல் காப்பீடு.
பொதுவாக எல்லா விவசாயிகள் வீட்டிலும் விதை பாதுகாக்கப் பட்டு இருக்கும்.” வித்து இல்லாதவன் சொத்தை” என்று நம்பிய காலம் அது. மிகச் சொற்ப அளவு ஏக்கர் – ஏக்கர்காரர்கள். கோட்டைக் கட்டி விதை பாதுகாப்பு செய்ய வேண்டியதில்லை. மிகச்சொற்ப விதை போதுமே! கோட்டை அளவு விதை தேவையில்ல. இவர்கள் விதை பாதுகாத்து வைத்திருபவர்களிடம் விதை நெல்லாகவோ, அல்லது நாற்றாகவோ பெற்றுப் பயன்படுத்திக் கொள்வார்கள். எல்லாமே பெரும்பாலும் பண்டமாற்று அல்லது “உழைப்பு பங்காளி” முறை. சமுதாய சகோதரத்துவ முறை. அதாவது கோட்டை நெல் வைத்திருப்பவர்கள் விதை தெளிக்கும் போது, இவர்களும் கூட இருந்து விதை தெளிப்புக்கு உதவி செய்துவிட்டு தங்களுக்கு வேண்டிய விதை நெல்லை பெற்றுச் செல்வார்கள். எல்லாமே “கூட்டுறவு வாழ்க்கை” முறை.
உழைப்புக்கும் காசு இல்லை. விதை நெல்லுக்கும், நாற்றுக்கும் காசு இல்லை. அப்படியும் ஒரு காலம் இருந்தது என்பதை இன்றைய இளைஞர்கள் தெரிந்த கொள்ள வேண்டும்.
“மூட்டை விலை கோட்டைக்கு” என்பது தமிழ்நாட்டுப் பழமொழி வரையறை. அதாவது ஒரு மூட்டை நெல் என்பது 24 மரக்கால். ஒரு கோட்டை நெல் என்பது 18 மரக்கால்.
மூட்டை நெல் என்பது முதிர்ந்த நெல், முதிராத நெல், கலப்பு நெல் ஒன்றிரண்டு பதர் எல்லாம் கலந்து இருக்கும். விதை நெல் என்பது பொறுக்கு விதை. ஆகவே இந்தத் தனிப்பட்ட உழைப்புக்காக, இவ்வளவு தான் ஈட்டம்(லாபம்) வைக்க வேண்டும் என்கிற “பண்பாட்டு வரையறை” செய்து வைத்திருந்தார்கள். அதாவது ஒரு மூட்டை நெல் ரூ. என்றால், ஒரு கோட்டை விதை நெல்லும் ரூ. சொற்ப ஈட்டம் உழைப்புக்கானது.
இப்போது விதை நெல் கிலோ . சில தானிய விதைகள் கிலோ. எல்லாமே வணிகம்தானா? வாழ்கையே பணம் தானா? அரசாங்கமே இப்படித்தானே விற்று, கற்றுக் கொடுக்கிறது?
காசாகப் பார்க்கும் பார்வை விவசாயிகளுக்கு எப்படி வந்தது?
ஊருக்கே, உலகுக்கே சோறு போடுபவர்கள் விவசாயிகள், அவர்கள் வெளியூர் சென்று இரவு தங்க நேர்ந்தால், எந்த விட்டிலும் உணவு படைத்து, படுக்க இடம் கொடுத்து அனுப்புவார்கள்.
இப்பொழுது படுக்கச்சொல்ல திண்ணையும் இல்லை; உணவளிக்க யாருமே இல்லை. பிச்சைக்காரனாக விவசாயி விரட்டப்படுகிறான். காசு வாங்கிக்கொண்டு கிராமத்துக் குடிசை கடைகளில் சோறு போடுகிறான்.ஆகவே விவசாயிகளும் விளை பொருளைக் காசாகப் பார்க்கும் பார்வையை கற்றுக்கொண்டார்கள். இதுதானே உண்மை.
எல்லோரும் பட்டினியிலிருந்து விடுபட வேண்டும்; எல்லோருக்கும் உணவளிக்க வேண்டும், அதற்காக இரவு பகல் பாராது ஓய்வு என்பது அறவே மறந்து ஆண்டு முழுவதும் அழுக்கு படிந்த சேற்று வேலை செய்து கொண்டிருப்பவன் உழவன். தனி மனித இன்பம், குடும்ப இன்பம், பிற ஊர் பார்த்து வருதல் உட்பட எல்லா இன்பங்களையும் தியாகம் செய்தவன் உழவன். விதைத்தோம், அறுத்தோம் என்றில்லாமல், எல்லா வித இயற்கைச் சீற்றத்தையும் தாங்கி அல்லல் பட்டு, ஊருக்காக, உலகுக்காக வாழ்ந்து சலித்தவன் உழவன். அனால் பசி ஆறிய பிறகு, உற்பத்தி செய்து கொடுத்த உழவரைத்தான் எல்லோரும் மறந்துவிட்டார்கள். படைத்த சோறுக்கு, உழைப்புக்கு நன்றி கூட பாராட்டுவதில்லை, நெஞ்சம் கொதிக்கிறது தானே!
  மருத்துவர் அரியூர் காசிபிச்சை அவர்களின் “மறைந்து வரும் மாண்புகள்”என்னும் புத்தகத்திலிருந்து தொகுக்க பட்டது

முளையிலேயே கிள்ளவேண்டிய பிடிவாதம், அன்பு தாய் மார்களே!!! சற்று சிந்தியுங்கள்!!!



அன்பு தாய் மார்களே!!! சற்று சிந்தியுங்கள்!!!
இந்தக் காலத்து குழந்தைகள் ‘சென்ஸிடிவ்’ ஆக இருக்கிறார்களா? அல்லது பெற்றவர்களுக்கு பிள்ளைகளை வளர்க்கத் தெரியவில்லையா?’ என்கிற அந்த வாசகியின் கேள்வியுடன், சென்னையைச் சேர்ந்த பிரபல குழந் தைகள் மனநல நிபுணர் ஜெயந்தினியை சந்தித்தோம்.
‘‘குழந்தைகள் பிடிவாதம் பிடிக்கிற விஷயத்தில், பெற்றவர்கள்தான் முதல் குற்றவாளிகள்!’’ என்றவர், பெற்றோர் செய்கிற தவறுகளை சுட்டிக் காட்டினார்.
‘‘நான் சில அம்மாக்களை சந்தித்திருக்கிறேன். ‘இவன் ஒரு விஷயத்தை நினைச் சுட்டான்னா, அழுது, அடம் பிடிச்சாவது சாதிச்சிடுவான்.. அப்பிடியே எங்கப்பா மாதிரி..’ என்றும், ‘நான் பசங்களுக்கு எதையுமே இல்லைனு சொல்றதில்லை. அந்தக் காலத்துல நாமதான் கஷ்டப்பட்டு வளர்ந்தோம். பசங்களுக்குக் கஷ்டம் தெரியக் கூடாது..’ என்றும் பெருமையுடன் சொல்வார்கள். இப்படி.. வெற்றுத் தாள் போல எதையும் ஏற்கத் தயாராக இருக்கிற குழந்தையின் மனதில், தான் நினைத்தது எல்லாம் நடக்கும் என்கிற எண்ணத்தை விதைத்து, அவர்கள் மனம் முழுக்க பிடிவாதத்தை இறைக்கிற தவறைச் செய்கிறவர்கள் பெற்றவர்கள் தான்! பெற்றோர் தங்கள் குழந்தையின் மீது உள்ள பாசத்தை வெளிப்படுத்தத்தான், இப்படி அவர்கள் கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுக்கிறார்கள். உண்மையில், குழந்தையின் மீது பாசமும் அக்கறையும் இருக்கிறவர்கள், இப்படி நடந்து கொள்ளக் கூடாது..’’ என்றவர், அது ஏன் என்பதையும் விவரித்தார்.
‘‘குழந்தைக்கு ‘நோ’ என்கிற வார்த்தையை அழுத்தம் திருத்தமாகச் சொல்லாத வரையில், பெற்றோரின் எந்தக் கஷ்டமுமே குழந்தைக்குத் தெரியாது. அதோடு, ‘நமக்குச் செய்யவேண்டியது பெற்றவர்களான இவர்களின் கடமை.. செய்கிறார்கள்’ என்று ‘டேக்கன் ஃபார் கிரான்டட்’ ஆக.. அதாவது.. தனக்கு சாதகமாகத்தான் குழந்தை எடுத்துக் கொள்ளுமே தவிர, ‘நம் மேல் எத்தனை பிரியம் இவர்களுக்கு’ என்றெல்லாம் நினைக்கவே நினைக்காது.
மாறாக, ‘இந்தப் பொருளோட விலை ரொம்ப ஜாஸ்தி. அம்மா கிட்ட அவ்வளவு பணம் இல்ல..’ என்பது போன்ற உண்மையான காரணங்களை எடுத்துச் சொல்லவேண்டும். அப்போதுதான், குழந்தைக்கு பணத்தின் அருமையும், பெற்றோரின் அருமையும் தெரியும்.
எந்தக் குழந்தைக்கு கேட்டதெல்லாம் மிக எளிதாகக் கிடைத்து விடுகிறதோ.. அந்தக் குழந்தை, மனதைரியம் குறைந்ததாகவும், தோல்வியை தாங்கிக் கொள்கிற சக்தி இல்லாததாகவும்தான் வளருகிறது. இப்படிப்பட்ட குழந்தைகள்தான், தான் நினைத்த ஏதோ சிறு ஒரு விஷயத்தை அடைய முடியாவிட்டால்கூட மனம் உடைந்துபோய் வாழ்வில் நிம்மதியையும் சந்தோஷத்தையும் இழக்கத் தொடங்கி விடுகிறார்கள்’’ என்றவர், குழந்தைகளின் பிடிவாதம் எந்தக் கட்டத்தில் ஆபத்தானது என்பது பற்றியும் தெளிவுபடுத்தினார்.
‘‘பொதுவாக, பிடிவாதம் பிடிப்பது குழந்தை யின் இயல்புதான். ஏதோ ஒரு பொருளுக் காகவோ, என்றைக்கோ ஒருநாளோ பிடிவாதம் பிடிக்கிற குழந்தையை நினைத்து, பெற்றோர் பயப்படத் தேவையில்லை. அந்தப் பழக்கம் குழந்தை வளர வளர சரியாகிவிடும். ஆனால், குழந்தை எதற்கெடுத்தாலும் பிடிவாதம் பிடிக்கும்போதுதான் அது திருத்தப்பட வேண்டிய பிரச்னையாகிறது.
சின்ன விஷயத்துக்கெல்லாம் அழுது அடம்பிடிப்பது, கீழே விழுந்து புரள்வது, கையில் கிடைப்பதை எடுத்து வீசுவது.. என்று அதகளம் செய்து வளரும் குழந்தைகள், விளையாட்டில் சிறு தோல்வி யைக் கூடத் தாங்க முடியாமல், உடன் விளையாடும் குழந்தைகளை அடிப்பது, கிள்ளுவது, கடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடு வார்கள். காலப்போக்கில் தனக்கு ஒன்று கிடைக்கவில்லை என்றால் பெற்றோரைக்கூட மதிக்க மாட்டார்கள்!’’ என்றவர், முடிவாக சொன்னது ஒவ்வொரு பெற்றோருக்குமான எச்சரிக்கை..
‘‘பொதுவாகவே, வாழ்வில் தவறான முடிவு எடுக்கும் பெரும் பான்மையானவர்கள், அதிக பிடிவாத குணமுடையவர்கள்தான். அனுசரித்துப் போகாமல், தான் நினைத்ததுதான் நடக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறவர்கள், தொழிலில் மட்டுமல்ல.. திருமண வாழ்க்கையிலும் தோல்வியையே அடைகிறார்கள். தானும் வாழாமல், தன்னைச் சார்ந்தவர்களையும் வாழவிடாமல், பிரச்னைக் குரிய நபர்களாகவே மாறிப் போகிறார்கள்’’.
உஷார் மம்மீஸ் உஷார்!
முளையிலேயே கிள்ளவேண்டிய பிடிவாதம்!
‘பிடிவாதம், குழந்தைகளின் இயல்பான குணம்தான்!’ என்று நினைக்கிற எவரையுமே உலுக்கிப் போட்டுவிடக் கூடியது, நம் வாசகி ஒருவர் எழுதியிருந்த இந்த சம்பவம்..
‘எங்கள் பக்கத்து வீட்டுக்காரருக்கு ஒரே பையன் என்பதால், அவன் என்ன கேட்டாலும் உடனடியாக வாங்கிக் கொடுத்து விடுவார்கள். அவன் பிடிவாதமும் வீம்பும் தெரு முழுக்க பிரசித்தம்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒருநாள்.. அப்போது அவன் ஏழாவது படித்துக் கொண்டிருந்தான். பள்ளியிலிருந்து வந்தவன், அவன் அப்பாவிடம் நண்பர்களுடன் சினிமாவுக்குப் போக காசு கேட்டான். ‘இது என்ன புதுப் பழக்கம்?’ என்று முதன்முறையாகக் கண்டித்தவர், பணம் தர மறுத்து விட்டு வெளியில் சென்றுவிட, ஒரு கெரசின் டின்னுடன் அழுது கொண்டே தடதடவென மொட்டை மாடிக்குப் போன அந்தப் பாவிப் பையன்.. தனக்குத் தானே தீ வைத்து.. ப்ச்.. பரிதாபம்!
தங்கள் அருமை புத்திரன், ‘ஐயோ.. எரியுதே..’ என்று அலறி அலறி, செத்துப்போன துக்கத்தைத் தாள முடியாமல், இன்றளவும் நடை பிணமாகவே வாழ்கிறார்கள் அந்தப் பெற்றவர்கள்..’
- என்று அந்தக் கடிதம் சொன்ன விஷயத்தின் உக்கிரத்தை நம்மால் தாளவே முடியவில்லை
குழந்தையை பிடிவாத குணமில்லாமல் வளர்ப்பதற்கு டாக்டர் ஜெயந்தினி கொடுத்த ‘பிராக்டிகல் டிப்ஸ்’..
குழந்தைக்கு சாப்பிட, நடக்க கற்றுத் தருவதைப் போலவே, தோல்விகளை சந்திக்கவும் கற்றுக் கொடுங்கள். உதா ரணமாக, குழந்தை சாக்லெட் கேட்டால், அன்பாக, ‘நாளைக்கு வாங்கித் தர்றேன்..’ என்று சொல்லுங்கள். குழந்தை ‘இப்பவே வேணும்..’ என்று அழுதாலும், ‘நாளைதான்’ என்று தெளிவாகச் சொல்லுங்கள். உங்களிடம் உறுதியில்லாவிட்டால், அதன் பிடிவாதம் அதிகரிக்கவே செய்யும்.
குழந்தை கேட்பதற்கு, வீட்டில் உள்ள அனைவருமே ஒரே பதிலை சொல்ல வேண்டும். ‘அப்பா தர மாட்டேங்கறாரா? நான் வாங்கித் தர்றேன்டீ என் செல்லம்’ என்று சொன்னால், குழந்தைக்குக் குளிர் விட்டு விடும்.
குழந்தை அழுது, புரண்டு, ஆர்ப் பாட்டம் செய்தால், எரிச்சலோ கோபமோ கொள்ளக் கூடாது. பரிதாபப்படவும் கூடாது. அதை கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டும். தன்னை யாரும் கவனிக்க வில்லை என்பது தெரிந்ததும், குழந்தை அழுகையை நிறுத்திவிட்டு, இயல்பாகி விடும்.
குழந்தை உங்களிடம் கேட்கிற பொருள் அதற்குத் தேவையா.. இல்லையா.. என்பதை முடிவு செய்யவேண்டியது குழந்தை அல்ல.. நீங்கள்தான்!
சேட்டை செய்கிற உங்கள் குழந்தையை, இதே விஷமத்தை பக்கத்து வீட்டுக் குழந்தை செய்தால், எப்படி உணர்வீர்களோ, அதே கண்ணோட்டத்தோடு பாருங்கள். அப்போதுதான் உங்களால் சரியான முடிவை எடுக்க முடியும்.

Monday 25 July 2016

கிமு. கிபி. புத்தக விமர்சனம் (Kimu Kipi Book Review)


நாம் வாழும் உலகத்தின் வியப்பூட்டும் திகைப்பூட்டும் அதிர்ச்சியூட்டும் ஆச்சரியமூட்டும் ஃப்ளாஷ்பேக்…!
kimukipi
வரலாறு என்றவுடனே நினைவில் வருவது சிறுவயதில் படித்த சமூக அறிவியல் புத்தகம்தான். அந்த புத்தகத்தை மிக சிரமப்பட்டு படித்தேன் மேலும் ஆசிரியர் கேட்க்கும் பல கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் அடியும் வாங்கி இருக்கிறேன். அப்பொழுதிலிருந்தே வரலாறு என்றாலே பிடிக்காது.
ஒரு நாள் நண்பர் ஒருவர் வைத்திருந்த புத்தகம் ஒன்றை எதேச்சையாக வாங்கி சில பக்கங்களை புரட்டினேன். அது வரலாறு சம்பந்தபட்ட புத்தகம்.   உடனே புத்தகத்தை மூடி விடலாம் என்று நினைத்தேன். ஆனால் அப்புத்தகத்தில் எதோ ஒன்று வித்தியாசமாக எனக்கு தோன்றியது. சரி, மேலும் படிக்கலாம் என்று தொடர்ந்தேன். அந்த சில பக்கங்களே மனதில் ஒரு ஆச்சிரியத்தையும் விறுவிறுப்பையும் விதைத்து விட்டன. சரி முழுவதும் படிக்கலாமே என்று நினைத்து கடையில் வாங்கிய புத்தகம் தான் கிமு. கிபி.
புத்தகத்தை படிக்க தொடங்கிய உடனே என் மனதில் தோன்றிய எண்ணம் “நாம் படிப்பது வரலாறுதானா?” ஏன் என்றால் அவ்வளவு ஜாலியாக இருந்தது புத்தகம். கிட்டதட்ட மதன் (புத்தகத்தின் ஆசிரியர்) அவர்கள் சொல்வது போல ஒரு அகழ்வாராய்ச்சி சுற்றுலா போனது போன்ற ஒரு உணர்வை அடைந்தேன். இந்த புத்தகத்தை போன்று என் வரலாறு புத்தகம் இருந்திருந்தால், நான் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தவித்து இருக்க மாட்டேனோ என்னவோ.
புத்தகத்தின் தொடக்கம் மனிதன் என்ற தலைப்பில் ஆரம்பிக்கிறது. அதில் பாக்டீரியாக்களை பற்றிய தகவல் வரும்போது ஆசிரியர் இவ்வாறு கூறுகிறார் “நியாயமாக இந்த பாக்டீரியாதான் நம் முதன்மையான எள்ளுத் தாத்தா!” இதை படிக்கும்போதே ஒரு ஜாலியான உணர்வு வருகிறது.  இது போன்ற வரிகள் புத்கம் முழுவதும் குவிந்துள்ளன.
டைனோசரில் தொடங்கி, உலகின் முதல் மனிதன் பெண், ஹமுராபியின் பாபிலோனிய பேரரசு, மொஹென்ஜோதாரோ நாகரிகம், எகிப்து நாகரிகம், கிரேக்க – பாரசிகப் போர், கிரேக்க தத்துவ மேதைகள், மெளரிய சாம்ராஜ்ஜியம், கலிங்கப் போர் மற்றும் கிறிஸ்து பிறப்பு வரை ஒவ்வொரு பகுதியும் நம்மை அந்த காலகட்டத்திற்கே கொண்டு செல்கின்றன.   ஒவ்வொரு பகுதியிலும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லமால் சிறப்பாக இருந்தது. மொத்தத்தில் நாம் அனைவரும் படித்து பின் நம் வீட்டில் நிச்சயம் வைத்துகொள்ள வேண்டிய சிறப்பான புத்தகம் .
நான் புத்தகத்தை பனுவலில் இருந்து வாங்கினேன்.  விலை ரூபாய் 150.